'அவன கருணை கொலை பண்ணுங்க...' 'ஒரு வேலையாவது கிடைக்கும்னு நெனச்சேன், ஆனா...' மகனை இடுப்பில் சுமந்து வந்து மனுவோடு காத்திருந்த பெண்மணி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மூளை வளர்ச்சி குன்றிய தனது மகனை கருணைக் கொலை செய்யக்கோரி, விருதுநகரில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தாய் ஒருவர் மனு கொடுத்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாண்டி தேவி. இவர் இன்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவில், "கணவரை இழந்துவிட்ட என்னால் தனியாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளையும், மூளை வளர்ச்சி குன்றிய மகனையும் பராமரிக்க முடியவில்லை. எனது நிலையை எடுத்துச் சொல்லி அங்கன்வாடி ஊழியராகப் பணி கோரி விண்ணப்பித்தும் பயனில்லை. எனவே, எனது மகனை கருணைக் கொலை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மகனையும் இடுப்பில் தூக்கி வந்திருந்தவர் அச்சிறுவனை தரையில் விரித்துப் படுக்க வைத்துவிட்டு மனுவோடு காத்திருந்த நிலை காண்போரைக் கண்கலங்கச் செய்தது. பாண்டிதேவியின் கணவர் சில மாதங்களுக்கு முன்னர் தான் கட்டிட வேலை பார்க்கும்போது கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார். மேலும், பாண்டிதேவியின் சகோதரரும், தந்தையும் இறந்துவிட்டனர். இதனால், சொந்தங்களின் உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தனியாக வசிக்கும் அவர் குடும்பத்தை நடத்த கஷ்டப்படுவதாகத் தெரிவித்து அங்கன்வாடி வேலை வழங்க வேண்டியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 184 பணியிடங்களுக்கு நேர்காணல் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. கணவரால் கைவிடப்பட்டப் பெண்கள், விதவைப் பெண்களுக்கு தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது..

இந்த நிலையில், இன்று மகனைக் கருணைக் கொலை செய்ய மனு கொடுத்து கண்ணீர் மல்க அரசின் கருணைக்காக காத்திருக்கிறார். அங்கன்வாடி வேலை கிடைத்தால் கல்வியைத் தொடர விரும்பும் தனது மகளையும், மூளை வளர்ச்சி இல்லாத மகனையும் எப்படியாவது காப்பாற்றி விடுவேன் என நம்பிக்கையோடு கூறியுள்ளார்.

MOTHERANDSON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்