'ஜோரா இயங்கிட்டு இருந்த ஹோட்டல்...' 'திடீர்னு இடி விழுந்தது போல ஒரு சத்தம்...' - ஒரே செகண்ட்ல அப்படியே தலைகீழா ஆயிடுச்சு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாத்தூர் அருகே தனியார் பேருந்து ஒன்று ஹோட்டலுக்குள் புகுந்துள்ளது. இதில் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கண்குடியில் இருந்து பாலவனத்தம், அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு தனியார் பேருந்து ஒன்று நேற்று (02-08-2021) பிற்பகல் கிளம்பி சென்றுள்ளது. பாலவனத்தம் கிராமத்தினை கடக்கும்போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கு சாலையோரத்தில் இடப்பக்கமாக இருந்த ஒரு ஹோட்டலுக்குள் சற்றும் எதிர்பாராதவிதமாக புகுந்தது.

இதில், பேருந்து ஓட்டுநர் நத்தத்துப் பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (49), ஹோட்டலில் பணிபுரிந்த பரோட்டா மாஸ்டர் மீராஉசேன் (50), ஹோட்டலுக்கு உணவு வாங்க வந்த தனபால் (19), மற்றும் பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் என நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இவர்கள் நான்கு பேரும் உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேருந்து மோதியதில் ஹோட்டலின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த காஸ் அடுப்பு, சிலிண்டர்கள் பேருந்துக்கு அடியில் சிக்கிக் கொண்டன. சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவும் ஏற்பட்டது.

உடனடியாக தகவல் அறிந்து விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சிலிண்டரில் இருந்து வெளியேறிய எரிவாயு கசிவு நிறுத்தப்பட்டது. இதனால் பெரிதாக நடக்கவிருந்த விபத்து தடுக்கப்பட்டது. இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்