'கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய பஸ்...' 'மனமுடைந்த பாசக்கார விவசாயி...' 50 குழந்தைகளை பறிகொடுத்த துக்க சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சியில் அரசு பேருந்து மோதி விவசாயி தன்னுடைய 50 ஆட்டுக்குட்டிகளை இழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் எப்போதுமே தான் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து வளர்த்துவருவது இயல்பு. கால்நடைகளுக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் மனம் உடைந்து போகும் அளவு பாசக்கார மனிதர்கள். ஒரே நேரத்தில் தன் 50 குழந்தைகளை இழந்துள்ளார் துரைசாமி என்ற விவசாயி.

விவசாயி துரைசாமி (43) என்பவர் திருச்சி மாவட்டம் சாலைகளம் பகுதியில் வசித்து வருகிறார். விவசாய தொழில் மட்டுமல்லாமல் தன் பண்ணையில் சுமார் 300 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். கால்நடைகளை வைத்திருப்பவர்கள் காலை முதல் மதியம் வரை அவற்றை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். எப்போதும் போலவே இன்று அதிகாலையும் தன் ஆட்டுக்குட்டிகளுடன் மேய்ச்சலுக்கு கிளம்பியுள்ளார்.

திருச்சி புதுக்கோட்டை சாலையை கடந்து தான் மற்றொரு மேய்ச்சல் பகுதிக்கு செல்ல முடியும். துரைசாமியும், ஆடுகளும் மண்டையூர் முருகன் கோயில் அருகே உள்ள சாலையை கடக்க ஆரம்பித்தனர். அதிகாலை 05.30 மணியளவில் அவ்வழியே சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையை கடந்து சென்ற ஆடுகளின் மீது மோதியது. மோதிய வேகத்தில் கூட்டத்திலிருந்த 50 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

ஒரே நேரத்தில் தன் 50 பிள்ளைகளை பறிகொடுத்த தகப்பனை போல துரைசாமி குடும்பம் கதறியது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து மண்டையூர் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்