'என் கண்ணு முன்னாடியே என் பையனுக்கு'...'எமனாக வந்த தண்ணீர் லாரி'... சென்னையில் நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தாயின் கண்முன்பே தண்ணீர் லாரியில் சிக்கிய 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் அன்புநகர் 9-வது தெருவை சேர்ந்தவர் பைசல். இவரது மனைவி நஸ்ரின். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு, 4 வயதில் முகமது உவைஸ் என்ற மகன் இருந்தான். வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்த அவனை, அவனது தாய் நஸ்ரின் மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று மலையில் கூட்டிக்கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று பள்ளி முடிந்து, வளசரவாக்கம் அன்புநகர், 6-வது தெரு வழியாக சென்ற போது, அந்த வழியாகவந்த சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த தண்ணீர் லாரி, மொபட் மீது மோதியது.

மோதிய வேகத்தில் தாயும், மகனும் நிலை தடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது லாரியின் பின்சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய முகமது உவைஸ், தலை நசுங்கி தாய் கண் முன்பே அதே இடத்தில் பரிதாபமாக இறந்தான். நஸ்ரின் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தாயின் கண்முன்பே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகனின் உடலை பார்த்து கதறி துடித்த நஸ்ரின், என் கண் முன்னாடியே என் பையனுக்கு இப்படி ஒரு நிலமையா என கதறி அழுதார்.

இந்நிலையில் விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓட முயற்சித்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் டிரைவரை மடக்கி பிடித்தார்கள். அதோடு அவருக்கு தர்ம அடியும் கொடுத்தார்கள். மேலும் ஆத்திரத்தில் லாரியின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, SCHOOLSTUDENT, CHENNAI, LORRY ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்