‘நான்கு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘தாயின் 2-வது கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்’... 'சென்னையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் நான்கு வயது குழந்தையை, தாயின் 2-வது கணவர் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி நகர், 4-வது தெருவைச் சேர்ந்த ரமேஷ் பந்தல் போடும் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 6 வருடத்திற்கு முன்பு, கொடுங்கையூரைச் சேர்ந்த பவானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாழினி  என்ற பெண் குழந்தையும், ராஜேஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் முதல் கணவரை பிரிந்து வந்த பவானி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, கொடுங்கையூரைச் சேர்ந்த ஆசிப் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர், புழல், காவாங்கரையில் உள்ள கண்ணப்ப சாமி நகரில், வாடகை வீட்டில் ஆசிப் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பவானி வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, குழந்தை யாழினிக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, சிகிச்சைக்காக, செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை யாழினி இறந்த தகவல், பவானியின் முதல் கணவர் ரமேஷுக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், பவானியும், ஆசிப்பும் சேர்ந்து கொலை செய்து விட்டார்கள் என்று காவல்துறையில் புகார் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புழல் போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறக்கவில்லை என்றும், வயிறு, நெஞ்சு, நெற்றி ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இறந்தது தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து பவானியின் 2-வது கணவர் ஆசிபை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் 4 வயது குழந்தை யாழினியை, உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும், அடிவயிறு, கன்னம், முதுகு ஆகிய பகுதிகளில் பலமாக ஜல்லி கரண்டியால் அடித்தும், குழந்தையை கொலைவெறியில் வயிற்றில் எட்டி உதைத்தும்,  கொன்றதாக ஆசிப் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஆசிப் மீது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் கொலை செய்த நோக்கத்தோடு அடித்து துன்புறுத்துவது மற்றும்  போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CHENNAI, KID, CHILD, FEMALECHILD, MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்