'மச்சான் அப்போ பாண்டிச்சேரி பிளான்'?... 'அதிகரிக்கும் கொரோனா'... வெளியான புதிய உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் வரும் காலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. புதுவையில் ஒரு சில இடங்களில் 7 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் பாதிப்பு விகிதம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உள்ளூரில் குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தப் புதுவை அரசு முடிவு செய்துள்ளது.

ஊரடங்கை அமல்படுத்த 32 பகுதிகளைப் புதுவை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. அந்த இடங்களில் மட்டும் உள்ளூர் ஊரடங்கினை பிறப்பித்து கலெக்டர் அருண் உத்தர விட்டுள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் கூறியிருப்பதாவது, புதுவையில் சண்முகாபுரம், தட்டாஞ்சாவடி, குண்டுப் பாளையம், திலாசுப்பேட்டை, தென்றல் நகர், அய்யப்பன் நகர், சக்தி நகர், அனிதா நகர், உழந்தைகீரப்பாளையம் அய்யனார் கோவில் வீதி, தியாகுமுதலியார் நகர், முல்லை நகர், பெரியார்நகர், கங்கையம்மன்கோவில் வீதி, குறிஞ்சிநகர், மடுவுபேட் ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பெத்துசெட்டிபேட்டை, தில்லை நகர் முதல் வசந்தம் நகர், புதுநகர், கணுவாப்பேட்டை ரோடு ஜங்ஷன், ஆர்.கே.நகர், பிச்ச வீரன்பேட், வாய்க்கால் வீதி (1, 2, 3, 4), ஜே.ஜே.நகர், ரெயின்போ நகர், குமரகுருபள்ளம், கோவிந்தசாலை, செந்தாமரை நகர், சோலைநகர், வைத்திக்குப்பம், முத்தியால்பேட்டையில் முத்தைய முதலியார் வீதி, செயிண்ட் ரொசாரியோ வீதி, காட்டாமணிக்குப்பம் வீதி, உளவாய்க்கால், தர்மாபுரி பெருமாள் கோவில் வீதி, பொறையூர் பேட்-புதுநகர், பங்கூர் பேட் ஆகிய பகுதிகளில் இந்த உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வருகிற 31-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 6-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த பகுதிகளில் உள்ள கடைகள், தொழிற்கூடங்கள், தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கவேண்டும். மேலும் காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மட்டுமே திறந்திருக்கவேண்டும். அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து மற்ற பணிகளுக்கு அனுமதி இல்லை என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், தனியார் கிளினிக்குகள், மருந்தகங்கள், பால் பூத்துகளுக்கு தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசுப்பணி, ஆஸ்பத்திரி, தனியார் கிளினிக், மருந்தகம், பால் பூத் பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேற்கண்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்படும். அனைத்துவிதமான போக்குவரத்தும் நிறுத்தப்படும். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். உத்தரவை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் பரப்புதல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அருண் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்