“ஒரு செகண்ட் திகைச்சு போய்ட்டோம்!”.. ‘அணிந்திருந்த புடவையை வீசி’.. ‘ஆற்றில் சிக்கிய 2 இளைஞர்களைக் காப்பற்றிய பெண்கள்’!.. ஆனாலும் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில், தண்ணீரில் மூழ்கிய இளைஞர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக தாங்கள் அணிந்திருந்த புடவையை தூக்கி வீச காப்பாற்றிய மூன்று பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தின், சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த ரவி, ரஞ்சித், கார்த்திக்,பவித்ரன் ஆகிய இளைஞர்களுள் 2 பேர், ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஆற்றுப்பள்ளத்தில் இறங்கிய நிலையில் அதில் சிக்குண்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர் .

அந்த நேரத்தில் சக நண்பர்களை காப்பாற்றுவதற்காக மேலும் 2  இளைஞர்கள் ஆற்றில் குதித்துள்ளனர். ஆனால் அவர்களும் பரிதாபகரமாக ஆற்றுப்பள்ளத்தில் சிக்குண்டு உயிருக்காக போராடிய போது, அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி ஆகியோர் இந்த இளைஞர்களின் பரிதாப நிலையை கண்டது, ஒரு நொடி கூட யோசிக்காமல் தாங்கள் உடுத்தியிருந்த புடவைத் துணியை, இளைஞர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தூக்கி வீசினர்.

பின்னர் பெண்கள் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு அந்த இளைஞர்களுள் 2 பேரை தங்கள் புடவை மற்றும் மூவரின் பலத்தைக் கொண்டு காப்பாற்றி கரை சேர்த்தனர். இறுதியில் 2 இளைஞர்கள் உயிருடன் மீட்டனர். ஆனாலும் பரிதாபகரமாக பவித்திரன், ரஞ்சித் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து கூறிய முத்தம்மாள்,  “ஆழமான பகுதிக்கு செல்லாதீர்கள் என நாங்கள் முன்பே அந்த இளைஞர்களை எச்சரித்த்தோம். ஆனாலும் அவர்கள் கேட்காமல் ஆற்றில் இறங்கி சிக்கிக் கொண்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு செய்வதறியாது திகைத்த நாங்கள் 3 பேரும் வேறுவழியின்றி அணிந்திருந்த சேலைகளை வீச, அதனைப் பிடித்துக் கொண்டு இரண்டு பேர் கரையேறி வந்து சேர்ந்தனர். எனினும் மேலும் 2 பேரை காப்பாற்ற முடியாமல் போனது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. மேலும் எங்கள் கண்ணெதிரிலேயே அவர்கள் இறந்தது வேதனையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்