“அடுத்தடுத்து உயிரிழந்த 17 ஆடுகள்”... “காப்பாற்றப் போனவரின் மாட்டுக்கும் நேர்ந்த சோகம்!”.. பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உசிலம்பட்டி அருகே மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஆடுகள் நீர் அருந்திய பிறகு உயிரிழந்த சம்பவம் அப்போது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குளத்துப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான 17 ஆடுகளை அதே ஊரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீடு திரும்பிய 17 ஆடுகளும் வீட்டில் இருந்த நீரை அருந்திய சிறிது நேரத்திலேயே ஒவ்வொன்றாக அடுத்தடுத்து உயிரிழக்கத் தொடங்கின. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயப்பிரகாஷ் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்தார். அப்போது அந்த வழியாக தனது மாட்டை அழைத்துக் கொண்டு வந்த ராமு என்பவர் ஆடுகளை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் இதனிடையே ஆடுகள் அருந்திய நீரை ராமுவின் மாடும் அருந்தி பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் மற்றும் உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரித்ததில் ஆடுகள் மற்றும் மாடு அருந்திய நீரில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆடு, மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இணைப்பில் உள்ள படம் சித்தரிப்பு படம்.

GOAT, COW, DEATH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்