என்னங்க ‘சூப்பர் ஓவர்’.. நேத்து மேட்ச்ல ‘டிரெண்ட்டே’ இந்த பொண்ணுதான்.. ஒருவழியா ‘யாருன்னு’ தெரிஞ்சிருச்சு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப்-மும்பை அணிகளுக்கு இடையே நடந்த சூப்பர் ஓவரின் போது திரையில் தோன்றிய இளம்பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக டி காக் 53 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களின் முடிவில் அதேபோல் 6 விக்கெட் இழந்து 176 ரன்களை எடுத்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 5 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை அணியும் 5 ரன்களை எடுத்தது. இதனால் போட்டி மீண்டும் சூப்பர் ஓவருக்கு சென்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 1 விக்கெட்டை இழந்து 11 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 15 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் பரபரப்பாக நடைபெற்ற சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியில் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா பரபரப்புடன் காணப்பட்டார். இதேவேளையில் இளம்பெண் ஒருவரும் நகத்தைக் கடித்துக்கொண்டு பரபரப்பாக இருந்தார்.

சுமார் 21 நொடிகள் திரையில் காட்டப்பட்ட இவர் யார் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தனர். இதனால் சூப்பர் ஓவருக்கு மத்தியில் இந்த இளம்பெண்ணின் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த இளம்பெண் துபாயை சேர்ந்த ரியானா லால்வானி என்பது தெரியவந்துள்ளது. 21 நொடியில் உலகம் முழுவதும் டிரெண்டான இவரது பெயரில் போலியான பல இன்ஸ்டாகிராம் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இணையத்தில் பலரும் கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்