‘ஏன் மச்சி இவ்ளோ சீரியஸ்ஸா இருக்க?’.. பிரபல வீரரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு அஸ்வினின் கலக்கல் கமெண்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரஹானேவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு அஸ்வின் குறும்பாக ஒரு கமெண்ட் செய்துள்ளார்.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை (09.04.2021) தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்கு அடுத்த நாள் (ஏப்ரல் 10-ம் தேதி) மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளன.

இதற்காக மும்பை சென்றுள்ள சிஎஸ்கே வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மும்பையில் முகாமிட்டுள்ள டெல்லி அணியும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அதனால் அவருக்குப் பதிலாக இளம்வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக அஸ்வின், ரஹானே, ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் கேப்டனாக கிசுகிசுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரஹானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு தமிழக வீரரும், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின், ‘ஏன் மச்சி இவ்வளவு கோபம்? பல லட்சம் மதிப்புள்ள சிரிப்பு எங்கே?’ என குறும்பாக கமெண்ட் செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ரஹானே, ‘அது உங்களுடன் பயோ பபிலில் இணைந்ததும் வரும்’ என பதிவிட்டுள்ளார். இருவரும் இந்த வருட ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்