‘அப்போ கண்ணீர் விட்டு அழுதேன்’.. நெறைய ‘ப்ளான்’ வச்சிருந்தோம்.. ‘ஆனா...!’ இந்திய வீரர் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது காயம் அடைந்ததும் கண்ணீர் விட்டு அழுததாக முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தயா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவின் கோட்டை எனக் கூறப்படும் பிரிஸ்பேன் கப்பா மைதானத்திலேயே இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் செய்தபோது முகமது ஷமி காயம் அடைந்தார். இதனால் அவர் அடுத்த மூன்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் காயம் ஏற்பட்டபோது அவரது மனநிலை எப்படி இருந்தது என்பதை முகமது ஷமி நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து கூறிய முகமது ஷமி, ‘இந்த வெற்றி மிகப்பெரிய சாதனை. இந்திய அணியில் ஏராளமான வீரர்கள் காயம் அடைந்தனர். ரிசர்வ் வீரர்களை வைத்துக்கொண்டு அணியை ரஹானே வழிநடத்தியது பாராட்டுக்குரியது.

அறிமுகமான போட்டியிலேயே இளம்வீரர்கள் தங்களது ஆளுமையை வெளிக்காட்டினர். 2018-க்குப் பிறகு தற்போது இந்த தொடரை கைப்பற்றியது மிக முக்கியான ஒன்று. இந்த வரலாற்றுச் சாதனையுடன் ஒப்பிட வேறெதுமில்லை. இந்தத் தொடரில் ஒரு அணியாக நாம் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். பந்து வீச்சு, பேட்டிங் எதுவாக இருந்தாலும் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள்.

நான் காயம் அடைந்தபோது கண்ணீர் விட்டு அழுதேன். ஏனென்றல், நாங்கள் ஏராளமான திட்டங்கள் தீட்டியிருந்தோம். ஆனால் காயத்தால் அணியில் இருந்து இடையிலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. நிர்வாகத்திற்கும், சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கும், அனைத்து வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என முகமது ஷமி கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்