VIDEO: ‘என்ன ஆச்சு..!’.. அடுத்தடுத்து மைதானத்தில் ‘சுருண்டு’ விழுந்த வீராங்கனைகள்.. டி20 கிரிக்கெட்டில் நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திலேயே இரண்டு வீராங்கனைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி நேற்று ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை அடுத்தது. இதனை அடுத்து விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இப்போட்டியில் வெற்றியடைந்ததன் மூலம் 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது இரண்டு வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் மைதானத்தில் மயங்கி விழுந்தனர். முதலில் சினெல் ஹென்றி என்ற வீராங்கனை திடீரென மயங்கி மைதானத்திலேயே விழுந்தார். இதனால் உடனே ஸ்ட்ரெச்சர் வரவழைக்கப்பட்டு மைதானத்தில் இருந்து அவரை தூக்கிச் சென்றனர்.

இதன்பின்னர் 10 நிமிடங்கள் கழித்து செடியன் நேஷன் என்ற மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனையும் மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அவரையும் உடனடியாக ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். இதனை அடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது இரு வீராங்கனைகளும் நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் எதற்காக மயங்கி விழுந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்