VIDEO: ‘பேட்டிங் பண்ண வேண்டாம்.. நிறுத்துங்க’!.. பால்கனியில் இருந்து கோபமாக கத்திய கோலி, ரோஹித்.. என்ன நடந்தது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். அதேபோல் கேப்டன் விராட் கோலி 42 ரன்களும், ஆல்ரவுண்டர் ஜடேஜா 40 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 391 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். இந்திய அணியை பொறுத்தவரை முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி நேற்று தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் 5 ரன்னிலும், ரோஹித் ஷர்மா 21 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி 20 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் ரஹானே கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. இதில் புஜாரா 45 ரன்கள் எடுத்திருந்தபோது மார்க் வுட் ஓவரில் அவுட்டாக, அதனைத் தொடர்ந்து ரஹானேவும் (61 ரன்கள்) மொயின் அலியின் ஓவரில் அவுட்டாகினார்.

இதனை அடுத்து ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர். இதில் ஜடேஜா (3 ரன்) வந்த வேகத்தில் மொயின் அலியின் ஓவரில் போல்டாகி வெளியேறினார். முக்கியமான பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவுட்டாக, 8-வது வீரராக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா களமிறங்கினார்.

அப்போது திடீரென வானில் மேகமூட்டம் காணப்பட்டதால் போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டது. இதனால் பேட்டிங் செய்ய முடியாத சூழல் உண்டானது. ஆனாலும் போட்டி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் கடுப்பான கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா, இந்திய வீரர்களை பேட்டிங் செய்ய வேண்டாம் என பால்கனியில் இருந்து கோபமாக சைகை காட்டினர். உடனே களத்தில் இருந்த இஷாந்த் ஷர்மா அம்பயரிடம் இதுகுறித்து முறையிட்டார்.

இதனை அடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிடம் அம்பயர்கள் கலந்து யோசித்து போட்டியை நிறுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்