Video: கையை தூக்கிய ‘அம்பயர்’.. உச்சக்கட்ட ‘கோபத்தில்’ முறைத்து பார்த்த ‘தல’.. என்ன நடந்தது..? சர்ச்சையை கிளப்பிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அம்பயர் வைடு காட்டுவதற்காக கையை விரிக்க முயன்றபோது தோனி கோபமாக முறைத்து பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை சென்னை அணி எடுத்தது. இதனை அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதாராபாத் அணி விளையாடியது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி, அம்பயரை கோபமாக முறைத்து பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியின் 19-வது ஓவரை சர்துல் தாக்கூர் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை ரஷித் கான் சந்தித்தார். அவர் அதற்கு முந்தைய ஓவரில் நல்ல அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார். அதனால் அவர் விளாசி விடுவார் என்பதற்காக பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அகலமாக வீசினார் தாக்கூர். அந்த பந்து வைடு என்பதுபோல தெரிந்தது. அதற்கு முன்பாக ஒரு பந்தையும் அவ்வாறுதான் அவர் வீசி நடுவர் வைடு கொடுத்திருந்தார். இதனை அடுத்து இந்த பந்துக்கும் நடுவர் திரும்பி கையை அகலமாக விரித்து வைடு என சொல்வதற்கு முயற்சி செய்தார்.

அப்போது கடும்கோபம் கொண்ட தோனி, முறைத்தபடியே அம்பயரை பார்த்து ஏதேதோ சொன்னார். இதைப்பார்த்த அம்பயர் ஒரு நொடி யோசித்து, பின்னர் கையை அப்படியே கீழே இறக்கி திரும்பிவிட்டார். இதை வெளியே உட்கார்ந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கோபமாகி ஆகிவிட்டார். என்ன நடக்கிறது என்று கையை அகற்றி தனது அதிருப்தி வெளிப்படுத்தினார்.

வைடு வழங்கப்படாததால் ஹைதராபாத் அணிக்கு 1 ரன் கிடைக்காமல் போனது. இது ஹைதராபாத் அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டது. அந்த ஓவரில் சிறப்பாக அடித்து இருந்தால் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த சர்ச்சை காரணமாக ஹைதராபாத் அணி அடிக்க வேண்டிய ரன் இலக்கு இன்னும் அதிகரித்துக் கொண்டே சென்று, இறுதியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது.

தோனி வழக்கமாக மிகவும் கூல் கேப்டன் என்று அறியப்படுபவர். ஒரு சில நேரங்களில் மட்டும் இதுபோல மைதானத்தில் கோபமடைவதை ​ ரசிகர்கள் பார்த்துள்ளனர். அதிலும் இன்றைய போட்டியை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பு தோனியின் முகத்தில் காணப்பட்டது. தொடர் தோல்வியின் நெருக்கடி காரணமாக சற்று கோபமாகவே இன்றைய போட்டியில் காணப்பட்டார். இந்த நிலையில் வைடு கொடுக்க வந்த அம்பயர், தோனி கோபமாக முறைத்து பார்த்ததும் கையை கீழே இறக்கியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்