VIDEO: ‘எடுத்து திருப்பி எறி’!.. செம கடுப்பான கோலி.. போட்டியை பரபரப்பாக்கிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களின் செயலால் இந்திய கேப்டன் விராட் கோலி கோபமடைந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. இதில் கே.எல்.ராகுலின் (129 ரன்கள்) அபார ஆட்டத்தால் 364 ரன்களை இந்தியா குவித்தது. அதேபோல் ரோஹித் ஷர்மா 83 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இதில் கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி 391 ரன்களை குவித்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். தற்போது இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் இப்போட்டியின் நடுவே ரசிகர்கள் சிலர் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் போட்டியின் 69-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார். அப்போது பவுண்டரில் லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த கே.எல்.ராகுல் மீது இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் பாட்டில் மூடிகளை வீசினர்.

இதனை உடனே கேப்டன் விராட் கோலியிடம் கே.எல்.ராகுல் தெரிவித்தார். ரசிகர்களின் செயலால் ஆத்திரமடைந்த கோலி, அந்த பாட்டில் மூடிகளை திருப்பி வீசுமாறு கே.எல்.ராகுலிடம் கூறினார். இதனை அடுத்து இதுதொடர்பாக அம்பயர்களிடம் இந்திய வீரர்கள் முறையிட்டனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. பாட்டில் மூடிகளை தூக்கி வீசிய நபர்கள் குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இந்திய ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்