‘நேத்து மறைமுகமா இந்த மெசேஜ்-அ தான் தவான் சொல்லிருக்காரு’!.. அப்போ அவருக்கு ‘ஆப்பு’ தானா..? நெட்டிசன்கள் கேள்வி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் ஷிகர் தவான் அதிரடி காட்டினார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 11-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இந்த கூட்டணி டெல்லி அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. 100 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப் அமைத்த இவர்களை பிரிக்க டெல்லி அணி கடுமையாக திணறி வந்தது.

இந்த சமயத்தில் டெல்லி அணியின் மெரிவாலா வீசிய ஓவரில் மயங்க் அகர்வால் (69 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ரபாடா ஓவரில் கே.எல்.ராகுலும் (61 ரன்கள்) அவுட்டாகினார். இதனைத் தொடர்ந்து கிறிஸ் கெய்ல் 11 ரன்களிலும், தீபக் ஹூடா 22 ரன்களிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர் ஷாருக் கான் 5 பந்தில் 15 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை பஞ்சாப் அணி குவித்தது.

இதனைத் தொடர்ந்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் ப்ரீத்வி ஷா அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் 32 ரன்கள் எடுத்திருந்தபோது அர்ஷ்தீப் சிங் ஓவரில் ப்ரீத்வி ஷா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித்தும் 9 ரன்னில் அவுட்டாகினார்.

தொடர்ந்து விக்கெட்டுகள் போனாலும், மறுமுனையில் கம்பீரமாக நின்ற ஷிகர் தவான் சிக்சர், பவுண்டரிகளை விளாசிக் கொண்டே இருந்தார். இதனால் இவரை அவுட்டாக்க பஞ்சாப் அணி பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டது. ஆனாலும் பஞ்சாப் பவுலர்களுக்கு தவான் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் 92 ரன்கள் (13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்திருந்தபோது ஜெய் ரிச்சர்ட்சன் ஓவரில் போல்டாகி தவான் வெளியேறினார்.

இதனை அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பந்த் (15 ரன்கள்), மார்கஸ் ஸ்டோனிஸ் (27 ரன்கள்) மற்றும் லலித் யாதவ் (12 ரன்கள்) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, 18.2 ஓவர்களில் 198 ரன்கள் அடித்து டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இதில் ஆட்ட நாயகன் விருது ஷிகர் தவானுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் தன்னுடைய இடத்தை உறுதி செய்யும் விதமாக, ஷிகர் தவான் தனது பேட்டால் மெசேஜ் அனுப்பியுள்ளார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்திய அணியின் டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் கே.எல்.ராகுலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்திய அணியில் பல இளம் வீரர்களின் வருகையால், ஷிகர் தவானுக்கு அடிக்கடி இடம் கிடைப்பதில்லை. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும், சில போட்டிகளில் மட்டுமே தவானுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது பேசிய தவான், ‘குழிக்குள் இருந்துக் கொண்டு, எனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வருகிறேன்’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஷிகர் தவான் 85 ரன்களும்,  நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 92 ரன்களும் எடுத்துள்ளார். இதனால் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி தவானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுலை விட அதிகமான ஸ்டைக் ரேட்டை (144.73) தவான் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்