VIDEO: ‘பொட்டிப் பாம்பா மாறிட்டாரே’!.. இதை யாராவது ‘நோட்’ பண்ணீங்களா.. எல்லாம் ராகுல் டிராவிட்டோட எஃபெக்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது க்ருணால் பாண்ட்யா செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும்  3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களை இலங்கை அணி எடுத்தது.

இதில் அதிகபட்சமாக சாமிகா கருணாரத்னா 43 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியைப் பொறுத்தவரை சஹால், குல்தீப் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். இதில் ஷிகர் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் பிரித்வி ஷா அதிரடி காட்ட ஆரம்பித்தார். இதனால் 24 பந்துகளில் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷனும் தான் பங்குக்கு அதிரடி காட்டினார். 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தபோது சண்டகன் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 31 ரன்கள் விளாச, 36.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யா செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. அப்போது ஆட்டத்தின் 22-வது ஓவரை க்ருணால் பாண்ட்யா வீசினார். இதனை எதிர்கொண்ட தனஞ்சய டி சில்வா, ஸ்ட்ரைட் டிரைவ் திசையில் பந்தை அடித்தார்.

உடனே க்ருணால் பாண்ட்யா டைவ் அடுத்து பந்தை பிடித்தார். அப்போது நான் ஸ்டைக்கர் என்டில் இருந்த இலங்கை வீரர் சரித் அசலங்காவின் மேல் மோதுவதுபோல் சென்ற க்ருணால் பாண்ட்யா, சுதாரித்துக்கொண்டு எழுந்துவிட்டார். இதனை அடுத்து இருவரும் கட்டிணைத்து அணைத்து மரியாதை செய்துகொண்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் விளையாடுவதால்தான் க்ருணால் பாண்ட்யா இதுபோல் பண்பாக நடந்துகொள்வதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். பொதுவாக மைதானத்தில் க்ருணால் பாண்ட்யா ஆக்ரோசமாக காணப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்