‘தேவையில்லாம வாயை விட்டு வம்புல மாட்டிய ஆஸ்திரேலிய கேப்டன்’!.. சும்மா வச்சு செய்யும் ‘இந்திய’ ரசிகர்கள்.. அப்படி என்ன பேசினார்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியை கிண்டல் செய்து ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் ஆளாகியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட் தொடரில் வரலாற்று மிக்க ஒரு வெற்றியை பதிவு செய்தது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டி முடிவடைந்தது, கேப்டன் விராட் கோலி நாடு திரும்பினார். இதனால் ரஹானே தலைமையில் எஞ்சிய போட்டிகளை இந்தியா விளையாடியது.

அடிலெய்ட் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 4-0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் அந்த பேச்சுக்கே இங்கு இடமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்திய அணியின் ஆட்டம் இருந்தது.

கேப்டன் ரஹானே, சுழற்பந்து வீச்சாளர், அஸ்வின், வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்து வீச்சில் இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் கம்பீரமாக நிற்க ஆரம்பித்தது. இதனிடையே அஸ்வின், ஹனுமா விஹாரி உள்ளிட்ட இந்திய வீரர்கள் பேட்டிங் செய்யும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் வம்பிழுத்து இடையூறு செய்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு தடையையும் உடைத்து இந்தியா முன்னேறிக் கொண்டே இருந்தது.

ஆஸ்திரேலியாவின் கோட்டையான ஹப்பா மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் பும்ரா, அஸ்வின், முகமது ஷமி போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாமல் முகமது சிராஜ், நடராஜன், சர்துல் தாகூர் உள்ளிட்ட இளம் பந்துவீச்சாளர்களை கொண்டே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி கிரிக்கெட் உலகை இந்திய அணி திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போட்டியில் ரிஷப் பந்த், சுப்மன் ஹில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சொந்த மண்ணில் தோல்வியை தழுவியதால் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியை கிண்டல் செய்யும் விதமாக பேட்டி ஒன்றில் டிம் பெய்ன் பேசியுள்ளார். அதில், ‘இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதில் இருக்கும் சவால் என்னவென்றால், ஒன்றுமேயில்லாத ஒரு விஷயத்தை பெரிதுபடுத்தி நமக்கு தேவையில்லாத தொல்லை கொடுப்பார்கள். இதன்மூலம் நமது கவனத்தை திசை திருப்புவார்கள். அந்த தொடரில் இதற்குதான் நாங்கள் பலியாகிவிட்டோம்.

இதற்கு உதராணமாக, பிரிஸ்பன் மைதானத்தில் விளையாட மாட்டோம் என்றனர். அதனால் வேறு எங்கு விளையாட போகிறோம் என்ற பயம் எங்களுக்குள் எழுந்தது. இதுபோன்ற காரியத்தில் இந்திய அணியினர் கில்லாடிகள். இதனால்தான் எங்களது கவனம் சிதற நேரிட்டது’ என இந்திய கிரிக்கெட் அணியை டிம் பெய்ன் விமர்சனம் செய்திருந்தார். பிரிஸ்பனில் இந்திய அணி விளையாட மறுத்ததற்கு, அந்த சமயம் அங்கு கொரோனா தொற்று அதிகமாக இருந்ததுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிம் பெய்னை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்