“சொந்த வீடு கூட இல்ல”.. ‘IPL-ல செலக்ட் ஆனதும் அம்மா, அப்பா கண்ணீர் விட்டு அழுதுட்டாங்க’ .. வெளியான இளம் MI வீரரின் உருக்கமான பின்னணி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சொந்த வீடுகூட இல்லாமல் சிரமப்பட்டுதான் கிரிக்கெட் விளையாடி ஐபிஎல் தொடரில் இடம் பிடித்ததாக இளம் வீரர் உருக்கமாக பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டு முதல் மொத்தம் 10 அணிகள் மோதுவதால் ஆட்டம் பரபரப்பாக காணப்படுகிறது. அதேபோல் பல இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் திலக் வர்மா, அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் உலகக்கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். மேலும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் ஐபிஎல் மெகா ஏலத்தில் 1.7 கோடி ரூபாய்க்கு மும்பை அணி இவரை போட்டி போட்டு எடுத்தது.

அதன்படி ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் போட்டியில் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார். இதனை அடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது கேப்டன் ரோகித் சர்மா, பொல்லார்டு போன்ற முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டான வேளையில், நிதானமாக விளையாடி 33 பந்துகளில் 61 ரன்கள் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் தற்போது மும்பை அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்.

இந்த நிலையில் தனது குடும்பப் பின்னணி குறித்து திலக் வர்மா உருக்கமாக பகிர்ந்துள்ளார். அதில், ‘பொருளாளர் ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் நான் வளர்ந்தேன். எனது தந்தையின் மிகவும் குறைவான சம்பளத்தில் எனது கிரிக்கெட் பொருட்களை வாங்குவதற்கும், என் தம்பியின் படிப்பு செலவுக்கு போதவில்லை. அதனால் கடந்த சில வருடங்களாக நான் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் கிடைக்கும் பணம் மற்றும் ஒரு சிலரின் குறைந்த ஸ்பான்சர்ஷிப் தொகை மூலமாகவே என் கிரிக்கெட் செலவை பார்த்துக் கொள்கிறேன்.

எங்களுக்கு இன்னமும் சொந்த வீடு கிடையாது. அதனால் ஐபிஎல் தொடரில் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை வைத்து முதலில் என் தாய், தந்தைக்கு ஒரு வீடு வாங்கி கொடுப்பேன். ஐபிஎல்-ல் கிடைக்கும் பணம் என் வாழ்நாளில் நல்ல கிரிக்கெட் விளையாட உதவும் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் நடைபெற்றபோது நான் என் பயிற்சியாளருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது என்னை ஐபிஎல் அணிகள் வாங்க தொடங்கியதும், பயிற்சியாளர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டார். அதன்பின்னர் இந்த செய்தியை என் பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். குறிப்பாக என் அம்மா ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் உணர்ச்சியில் வாயடைத்துப் போனார்’ என திலக் வர்மா உருக்கமாக பேசியுள்ளார்.

MUMBAI-INDIANS, IPL, TILAK VARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்