‘கண்ணாலே சிக்னல்’.. உடனே ஓகே சொன்ன பிளமிங்.. தோனி பேட்டிங் செய்ய வரும் முன் டக்அவுட்டில் நடந்த சுவாரஸ்யம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ப்ளே ஆஃப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் (IPL) தொடரின் முதல் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் நேற்று துபாய் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி (Dhoni) பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது. இதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் டு பிளசிஸ் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த கூட்டணி 110 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது.

அப்போது டாம் கர்ரன் வீசிய 14-வது ஓவரில் ராபின் உத்தப்பா (63 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ஷர்துல் தாகூர், அம்பட்டி ராயுடு என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனாலும் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இதனால் 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்னை அணி இருந்தது. அப்போது ஆவேஷ் கான் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் (70 ரன்கள்) அவுட்டானார். இதனால், அடுத்து ஜடேஜாதான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் பல போட்டிகளில் கடைசி கட்டத்தில் களமிறங்கி அணியை வெற்றி பெற வைத்துள்ளார். வழக்கமாக தோனிதான் அந்த ஆர்டரில் களமிறங்குவார். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் சற்று தடுமாற்றமான ஆட்டமே தோனியிடம் வெளிப்பட்டது.

இந்த சூழலில் ருதுராஜ் கெய்க்வாட் அவுட்டானதும், தோனி மைதானத்துக்கு வந்தார். தான் எதிர்கொண்ட முதல் பந்தில் தடுமாறினாலும், அடுத்தடுத்த பந்துகளில் சிக்சர், பவுண்டரிகளை தோனி பறக்கவிட்டார். அதிலும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என இருந்தபோது, ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி, தன் மீது விழுந்த விமர்சனங்களுக்கு தோனி பதிலடி கொடுத்தார். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் அவுட்டானதும் டக் அவுட்டில் என்ன நடந்தது? என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் (Stephen Fleming) பகிர்ந்துள்ளார். அதில், ‘ருதுராஜ் கெய்க்வாட் அவுட்டானதும் யாரை களமிறக்குவது என விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது நான் போகிறேன் என தோனி கண்களாலே என்னிடம் கூறினார். முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் தோனி சிறப்பாக விளையாடி இருந்தார். அதனால் அவர் கூறியதும் நான் தடுக்கவில்லை. அதன்பிறகு முடிவு எப்படி இருந்தது என அனைவரும் பார்த்தோமே’ என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்