‘ரொம்ப நாளா சதி நடக்குது’!.. என் கணவரை ‘வில்லனா’ காட்டுறாங்க.. பேஸ்புக்கில் பொங்கிய ஷாகிப்பின் மனைவி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தனது கணவரை வில்லனாக காட்டும் முயற்சி நடைபெறுவதாக ஷாகிப் அல் ஹசனின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

வங்கதேசத்தில் Dhaka Premier Division Twenty20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிட்டட் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அபஹானி லிமிட்டட் அணி விளையாடியது. அப்போது ஷாகிப் அல் ஹசன் வீசிய ஓவரை சக வங்கதேச வீரர் முஸ்பிகுர் ரஹீம் எதிர்கொண்டார். அந்த ஓவரில் முஸ்பிகுர் ரஹீமின் காலில் பந்து பட்டதும் ஷாகிப் அல் ஹசன் அம்பயரிடம் எல்பிடபுள்யூ கேட்டார். ஆனால் அம்பயர் அவுட் இல்லை என கூறினார். இதனால் கோபமடைந்த ஷாகிப் அல் ஹசன், உடனே ஸ்டம்பை தனது காலில் எட்டி உதைத்துவிட்டு சென்றார். இது மைதானத்தில் இருந்த சக வீரர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கண்டனத்துக்கு உள்ளானது.

இதனை அடுத்து அபஹானி லிமிட்டட் அணி, 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிடவே, போட்டியை நிறுத்துவதாக அம்பயர் அறிவித்தார். அப்போது அம்பயரை நோக்கி வேகமாக வந்த ஷாகிப் அல் ஹசன், ஸ்டம்புகளை பிடிங்கி, தரையில் ஆக்ரோஷமாக வீசிவிட்டு சென்றார். இது சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஷாகிப் அல் ஹசனின் இந்த செயலுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து உடனடியாக தனது செயலுக்கு ஷாகிப் அல் ஹசன் வருத்தம் தெரிவித்தார். அதில், ‘அன்புள்ள ரசிகர்களே, எனது மனநிலையை இழந்து, வீட்டிலிருந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் அதிர்ச்சி அடையும் விதமாக நான் நடந்து கொண்டதற்காக மிகவும் வருந்துகிறேன். என்னைப் போன்ற ஒரு அனுபவ வீரர் இப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது. ஆனால் சில சமயங்களில் இதுபோல் துரதிர்ஷ்டவசமாக நடந்து விடுகிறது. இதற்காக அணி நிர்வாகம், போட்டி அதிகாரிகள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் நான் இதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று நம்புகிறேன்’ என ஷாகிப் அல் ஹசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஷாகிப் அல் ஹசனுக்கு ஆதரவாக அவரது மனைவி உம்மே அல் ஹசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்த சம்பவத்தை ஊடகங்களைப் போலவே நானும் அனுபவித்து வருகிறேன். தொலைக்காட்சியிலும் சில செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த சம்பவத்தின் உண்மையை அறிந்த சிலரின் ஆதரவை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஷாகிப் வெளிப்படுத்திய கோபத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக்காட்டி, முக்கிய பிரச்சனையை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இதில் முக்கியமான பிரச்சனை அம்பயரின் தவறான முடிவு. அதனால்தான் ஷாகிப் கோபப்பட்டார். தலைப்புச் செய்திகள் உண்மையில் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. என்னைப் பொறுத்தவரை எல்லா சூழ்நிலைகளிலும் அவரை வில்லனாக சித்தரிப்பது சிறிது காலமாக நடந்து வரும் ஒரு சதி’ என உம்மே அல் ஹசன் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்