"இந்த 'ரூல்ஸ்' எல்லாம் எங்க காலத்துல இருந்துருந்தா.. 'சச்சின்', 'கங்குலி' கூட ஃபெயில் தான்.." இது எல்லாம் இப்போ தேவையா??.. 'இந்திய' அணியை விளாசிய 'சேவாக்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த சில ஆண்டுகளாக, இந்திய கிரிக்கெட் அணியில், இளம் வீரர்கள் பலர், மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இப்படிப்பட்ட திறமையான இளம் வீரர்கள், இந்திய அணியில் ஆடுவதற்கு தகுதி பெற வேண்டுமெனில், யோ யோ டெஸ்ட் முறையில் நிச்சயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது தான் விதி. இதில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட தூரத்தை ஓடி முடிக்க வேண்டும். மேலும், உடற்தகுதியையும் இதில் நிரூபிக்க வேண்டியுள்ளது. இந்த தேர்வில், திறமை இருந்தும் சில வீரர்கள் தேர்ச்சி அடையாமல் இருந்து வருகின்றனர்.

உதாரணத்திற்கு, சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில், இளம் வீரர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோர் தேர்வாகியிருந்தனர்.


ஆனால், யோ யோ தேர்வில் தேர்ச்சி அடையாததால், இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு, அவர்களுக்கு கிடைக்காமல் போனது. இந்நிலையில், இந்த தேர்வை வைத்து, வீரர்களை இந்திய அணியில் களமிறக்குவது பற்றி, இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் (Sehwag) கருத்து தெரிவித்துள்ளார்.

'கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை, திறமை தான் எப்போதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. தற்போதைய நாட்களில், நீங்கள் உடற்தகுதியுடன் ஆடினாலும், திறமை இல்லையென்றால், போட்டியை இழக்கத் தான் வேண்டும். இதனால், திறமையை அடிப்படையாக கொண்டு தான் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற வேண்டும். வேண்டுமென்றால், கொஞ்சம் கொஞ்சமாக, உடற்தகுதியின் முக்கியத்துவம் குறித்து படிப்படியாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், உடனடியாக இந்த தேர்ச்சிக்கு மாற வேண்டும் என்பது தான் கேள்வியை எழுப்புகிறது. ஒரு வீரர் பீல்டிங் செய்யவும், 10 ஓவர்கள் பந்து வீசவும் முடிந்தால் போதுமானது. அதில் மட்டும் தான் அக்கறை கொள்ள வேண்டும். இந்த யோ யோ டெஸ்ட் குறித்து பேசும் அதே நேரத்தில், ஓடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றால், ஹர்திக் பாண்டியாவின் பணிச் சுமையைக் காரணம் காட்டி, அவர் பவுலிங் செய்யாமல் போனதன் காரணம் என்ன?.

அதே வேளையில், வருண் சக்ரவர்த்தி மற்றும் அஸ்வின் ஆகியோர், இந்த டெஸ்டில் தேர்ச்சி பெறாத காரணத்தால், இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை. இந்த நடைமுறை எனது காலத்தில் இருந்திருந்தால், சச்சின், லட்சுமணன், கங்குலி உள்ளிட்ட வீரர்கள் நிச்சயம் தேர்ச்சி பெற்றிருக்க மாட்டார்கள்.

எங்களது காலத்தில், இதற்கு இணையான ஒரு தேர்வு இடம்பெற்றிருந்தது. ஆனால், எங்களது காலத்தில் இப்படி ஒரு தேர்ச்சி இருந்திருந்தால், அதில் நாங்கள் 12.5 புள்ளிகளுக்கு குறைவாகவே மதிப்பெண்கள் எடுத்திருப்போம்' என சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் தேர்வு பெற, யோ யோ தேர்வில் சுமார் 17 மதிப்பெண்கள் வரை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்