‘அஸ்வின் தப்பா புரிஞ்சிக்கிட்டார்.. நானும் அப்போ அங்கதான் இருந்தேன்’.. முன்னாள் செலக்டர் பரபரப்பு பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அஸ்வின் விவகாரத்தில் ரவி சாஸ்திரி பேசியது சரிதான் என்று முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 427 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களில் அனில் கும்ப்ளே, கபில் தேவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் அஸ்வின் உள்ளார். இன்னும் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினால் கபில் தேவ்வை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடுவார்.

தோனி கேப்டனாக இருந்தபோது அஸ்வின்-ஜடேஜா ஜோடி சுழற்பந்து வீச்சில் கொடிகட்டி பறந்தது. விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பின் குல்தீப் யாதவ்-சஹால் ஜோடி அந்த இடத்தை பிடித்தது. அடுத்த 2 ஆண்டுகள் இந்த ஜோடிதான் இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தியது. அஸ்வின்-ஜடேஜா மெதுவாக ஓரங்கட்டப்பட்டனர்.

இதில் ஜடேஜா 2018-ம் ஆண்டு மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார். ஆனாலும் அஸ்வின் அணியிலிருந்து தொடர்ந்து  ஓரங்கட்டப்பட்டார். மேலும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. அப்போதெல்லாம் குல்திப் யாதவே அணியில் எடுக்கப்பட்டார்.

இந்த சமயத்தில் 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அப்போதுதான் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தது.

அப்போது பேசியிருந்த இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ‘ஒவ்வொரு வீரருக்கும் முடிவு இருக்கிறது. இப்போதைக்கு குல்தீப் யாதவ்தான் எங்களது முதன்மையான சுழற்பந்து வீச்சாளர்’ எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து தற்போது மனம் திறந்திருந்த அஸ்வின், ‘ரவி சாஸ்திரி மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. அவர் அந்த கருத்தை கூறிய தருணத்தில் நான் சுக்குநூறாக நொறுங்கிவிட்டேன். சக வீரரின் வெற்றியில் மகிழ்ச்சி கொள்வது முக்கியம் என்பது எனக்கு தெரியும். நான் குல்தீப் யாதவிற்காக மகிழ்ச்சிதான் அடைந்தேன். நான் மிகச்சிறப்பாக பந்து வீசிய சமயங்களில் கூட ஆஸ்திரேலியாவில் 5 விக்கெட்டுகளை எடுக்கவில்லை. அங்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது கஷ்டம் என எனக்கும் தெரியும்’ என அஸ்வின் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ரவிசாஸ்திரி, ‘சிட்னி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடவில்லை. அந்த தொடரில் குல்திப் யாதவ் சிறப்பாக பந்து வீசினார். அப்போது அவருக்கு வாய்ப்புகளை வழங்குவதுதான் நியாயமானது. என் பேச்சு அஸ்வினை காயப்படுத்தியிருந்தால் அதில் எனக்கு சந்தோசம்தான். ஏனென்றால் அதற்கு பின்னர்தான் அவர் திறமையை மேலும் வளர்த்துக் கொண்டு இன்றைக்கு சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஒரு பயிற்சியாளராக வீரர்களின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதால் எனது வேலை. அதைவிடுத்து அனைவரது ரொட்டியிலும் வெண்ணை தடவி விடுவது என் வேலை இல்லை’ என ரவி சாஸ்திரி விளக்கம் அளித்திருந்தார்.

தற்போது இந்த விவகாரம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங், ‘ரவி சாஸ்திரி அப்போது பேசியதை அஸ்வின் தவறாக எடுத்துக்கொண்டார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு நானும் சென்றிருந்தேன். ரவி சாஸ்திரி பேசியபோது நானும் அருகில்தான் இருந்தேன். வெளிநாட்டு தொடர்களில் குல்தீப் யாதவ் எங்களது சிறந்த பவுலர். அவரது பவுலிங் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கிறது என ரவி சாஸ்திரி கூறினார். அதை அஸ்வின் தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டிருக்கிறார். ரவி சாஸ்திரி சொன்னது சரிதான்’ என சரண்தீப் சிங் கூறியுள்ளார்.

RAVICHANDRAN ASHWIN, RAVISHASTRI, SARANDEEPSINGH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்