VIDEO: ‘பல வருட காத்திருப்பு’!.. 30 வயதில் இந்திய அணியில் இடம்.. தொப்பியை வாங்கியதும் ‘கண்ணீர்’ விட்டு அழுத வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் தொப்பியை வாங்கியதும் அறிமுக வீரர் ஒருவர் கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக, க்ருணால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று அமைந்ததாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏனென்றால் க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், அவருடன் தொடர்பில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், மனிஷ் பாண்டே, தீபக் சஹார், பிரித்வி ஷா, கிருஷ்ணப்பா கௌதம் உள்ளிட்ட வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனால் இலங்கைகு எதிரான 2-வது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சேத்தன் சக்காரியா மற்றும் நிதிஷ் ராணா உள்ளிட்ட அறிமுக வீரர்களுடன் இந்திய அணி விளையாடியது. ஆனால் அப்போட்டியில் கடைசி வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது.

அப்போட்டியில் விளையாடிய நவ்தீப் சைனிக்கு எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டது. அதனால் கடைசி டி20 போட்டியில் அவருக்கு பதிலாக சந்தீப் வாரியர் அணியில் சேர்க்கப்பட்டார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், லிஸ்ட் ஏ மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாகவும் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், 30 வயதில் சந்தீப் வாரியருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. அதனால், போட்டி ஆரம்பிக்கும் முன் இந்திய அணியின் தொப்பியை வாங்கியதும் அவர் கண்கலங்கினார். இந்த வீடியோவை பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்