ப்ளே ஆஃப் நேரத்துல திடீர்னு ‘விலகிய’ சிஎஸ்கே ஆல்ரவுண்டர்.. இப்போ என்ன பண்றது..? தீவிர ஆலோசனையில் கேப்டன் தோனி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் திடீரென அறிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட ஐபிஎல் (IPL) தொடரில் தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் இளம் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் (Sam Curran), ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதியானது.

அதனால் அதற்கு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் ஐபிஎல் தொடரில் சாம் கர்ரன் விளையாட மாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் சாம் கர்ரன் இடம்பெற்றிருந்தார்.

ஆனால், தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், டி20 உலகக்கோப்பை தொடரில் சாம் கர்ரன் விளையாட மாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் சாம் கர்ரனுக்கு பதிலாக அவரது சகோதரர் டாம் கர்ரன் மாற்று வீரராக இடம்பெற்றுள்ளார்.

ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சில நாட்களே உள்ள நிலையில், சாம் கர்ரன் காயம் காரணமாக விலகியது சிஎஸ்கே அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பிராவோ காயமடைந்த சமயங்களில், சாம் கர்ரன் அந்த இடத்தை நிரப்பி வந்தார். தற்போது சாம் கர்ரன் விலகியுள்ளதால், பிராவோவுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை பிராவோவுக்கு காயம் ஏற்பட்டுவிட்டால் மாற்று வீரராக யாரை களமிறக்குவது என கேப்டன் தோனி சிஎஸ்கே நிர்வாகத்துடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றி பெற சாம் கர்ரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியது வேதனை அளிக்கிறது. சிஎஸ்கே அணியில் நிறைய அற்புதமான தருணங்கள் அமைந்தன. சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

நான் எங்கிருந்தாலும், சென்னை அணிக்கு என் ஆதரவை அளிப்பேன். இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும். ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல் பலத்துடன் அணிக்கு திரும்புவேன்’  என சாம் கர்ரன் தெரிவித்துள்ளார். மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட இங்கிலாந்து அணிக்கு தனது வாழ்த்துக்களை சாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்