‘கடைசி ஓவர்ல சஞ்சு சாம்சன் ஏன் அப்டி செஞ்சாரு?’.. கடுப்பாகி திரும்பி ஓடிய மோரிஸ்.. சர்ச்சைக்கு விளக்கமளித்த சங்ககாரா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடைசி ஓவரில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் சிங்கிள் எடுக்க மறுத்த சர்ச்சை குறித்து அணியின் பயிற்சியாளர் சங்ககாரா விளக்கமளித்துள்ளார்.

14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 4-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், அறிமுக கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களை எடுத்தது. இதில் அதிகப்டசமாக அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 91 ரன்களும், தீபக் ஹூடா 64 ரன்களும், கிறிஸ் கெய்ல் 40 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அறிமுக இளம்வீரர் சேத்தன் சாகரியா 3 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளும், ரியான் பராக் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டகாரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் மனன் வோஹ்ரா களமிறங்கினர். அதில் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க, அடுத்ததாக மனன் வோஹ்ராவும் 12 ரன்களில் வெளியேறினார்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன்-ஜோஸ் பட்லர் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் பட்லர் 25 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சிவம் தூபே 23 ரன்கள், ரியான் பராஜ் 25 ரன்கள் என அடுத்தடுத்து அவுட்டாகினர். ஆனாலும் மறுமுனையில் கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தி வந்தார்.

இந்த நிலையில் கடைசி ஓவரில் 13 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் அணி இருந்தது. முதல் இரண்டு பந்து சிங்கிள் மட்டுமே செல்ல, அடுத்த பந்தில் சஞ்சு சாம்சன் சிக்சர் விளாசினார். இதனை அடுத்து கடைசி 2 பந்தில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு ராஜஸ்தான் அணி வந்தது. அப்போது ஸ்டிரைக்கில் இருந்த சஞ்சு சாம்சன், பந்தை மிட் ஆன் திசையில் அடித்தார்.

ஆனால் பந்தை பீல்டர் பிடித்துவிட்டதால், ரன் எடுக்க ஓடாமல் சஞ்சு சாம்சன் நின்றுவிட்டார். அப்போது நான் ஸ்டிரைக்கில் இருந்த கிறிஸ் மோரிஸ் ரன் எடுக்க ஓடி வந்து, திரும்பி சென்றார். சஞ்சு சாம்சனின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த கிறிஸ் மோரிஸ் களத்திலேயே முகத்தை சுளித்தார். அதன்பின்னர் கடைசி பந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், கேட்ச் கொடுத்து சஞ்சு சாம்சன் அவுட்டானார். இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் ராஜஸ்தான் தோல்வியடைந்தது.

கடைசி ஓவரில் சிங்கள் எடுக்க மறுத்த சஞ்சு சாம்சனின் செயல் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சஞ்சு சாம்சன் நீண்ட நேரம் களத்தில் இருந்ததால், பந்து எப்படி வரும் என அவருக்கு நன்றாக தெரியும், அதனால் அவர் செய்தது சரிதான் என கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் இதுகுறித்து தெரிவித்த ராஜ்ஸ்தான் அணியின் பயிற்சியாளரான சங்ககாரா, ‘சில சமயம் நீங்கள் பந்தை நன்றாக எதிர்கொள்கிறீர்கள் என உங்களுக்கு தெரியும். நீங்கள் ஃபார்மில் இருப்பதால், அதை செய்ய முடியும் என நம்புவீர்கள். சஞ்சு சாம்சனும் அந்த பொறுப்பைதான் ஏற்றுக்கொண்டார். அவர் அப்படி செய்ததை பாராட்ட வேண்டும்.

நீங்கள் இப்போது அந்த தவறவிட்ட சிங்கிள் பற்றி பேசலாம். ஆனால் நான் நம்புவது வீரர்களில் நடவடிக்கையும், அவர்களது அர்ப்பணிப்பும்தான். சஞ்சு சாம்சன் இந்த மேட்சை முடித்துக் கொடுக்க வேண்டும் என நினைத்தார். எதிர்பாராதவிதமாக முடியவில்லை. ஆனால் அடுத்த முறை அவர் கண்டிப்பாக அதை செய்வார்’ என தெரிவித்துள்ளார். இப்போட்டியில் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்