VIDEO: அந்த நேரத்துல ‘தோனி’ அப்படி ஆடுனதுதான் கரெக்ட்.. ஏன் தெரியுமா..? காரணத்தை விளக்கிய பாஸ்கி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து நடிகரும், தொகுப்பாளருமான பாஸ்கி விளக்கியுள்ளார்.

துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் (IPL) லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணி வெற்றி பெற்றது. இதற்காக பலரும் சிஎஸ்கே கேப்டன் தோனியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

டெல்லி அணிக்கு வெற்றி இலக்காக 137 ரன்களை சென்னை அணி நிர்ணயித்தது. இன்னும் 10-20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்காலம் என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியிருந்தார். அதேபோல் தோனி சரியாக பேட்டிங் செய்திருந்தால், அணியின் ஸ்கோர் உயர்ந்திருக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜடேஜாவை களமிறக்காமல் தோனி பேட்டிங் செய்ய வந்ததும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து நமது Behindwoods Air சேனலில் நடிகரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான பாஸ்கி கலந்துரையாடியுள்ளார். அதில் ‘தோனி பேட்டிங்கில் சிரமப்படுவது உண்மைதான். ஆனால் ஜடேஜா நல்ல பார்மில் உள்ளார். ஒரே ஓவரில் 15-20 அடிக்கிறார். அதனால் அவரை முன்னாடியே களமிறக்கி இருக்கலாம்.

அதேவேளையில், தோனி-அம்பட்டி ராயுடு கூட்டணி 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. மைதானம் கடினமாக இருக்கும்போது பேட்டிங் மெதுவாகதான் விளையாட முடியும். அப்போது அடித்து ஆட நினைத்திருந்தால் 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

இதுவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்தலில், டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சுதான் சிறந்தது. முதல் பந்தில் இருந்தே அவர்கள் பேட்ஸ்மேன்களுக்கு அடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. எப்போதாவது தான் அடிப்பதுபோல் பந்து வந்தது. அதை சரியாக கணித்து விளையாடியது அம்பட்டி ராயுடு மட்டும்தான்.

தீபக் சஹார் வீசிய ஒரு ஓவரில் ஷிகர் தவான் 21 அடித்ததுதான், போட்டி நம் கையை விட்டு செல்ல காரணமாக அமைந்தது. 136 ரன்கள் என்ற குறைவான இலக்கை வைத்துள்ளபோது, இதுபோல் வீசினால் ஒன்றும் செய்ய முடியாது. அதேபோல் கிருஷ்ணப்பா கௌதம் கேட்சை தவறவிட்டது சிஎஸ்கேவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. ஷர்துல் தாகூர் அற்புதமாக பந்து வீசினார்’ என பாஸ்கி கூறியுள்ளார்.

இப்போட்டியில் 6-வது வீரராக களமிறங்கிய தோனி, 27 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்தார். இதில் அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அதேபோல் போட்டி பரபரப்பாக சென்றுகொண்டிருந்தபோது, டெல்லி அணியின் பேட்ஸ்மேன் ஹெட்மயர் சிஎஸ்கேவுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தார்.

அப்போது சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ வீசிய 18-வது ஓவரில், ஹெட்மயர் சிக்சர் விளாச முயன்றார். ஆனால் பந்து நேராக பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கிருஷ்ணப்பா கௌதம் கைக்கு சென்றது. ஆனால் அவர் அந்த கேட்சை தவறவிட்டது மட்டுமல்லாமல், பந்து பவுண்டரிக்கு சென்றதையும் தடுக்க தவறிவிட்டார். இதன் பிறகுதான் டெல்லியின் பக்கம் ஆட்டம் திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்