"கங்குலி எந்த உலக கோப்பையை ஜெயிச்சு குடுத்து இருக்காரு??.." கோலியின் கேப்டன்சி விவகாரம்.. கடுப்பான ரவி சாஸ்திரி

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி மீதான விமர்சனத்திற்கு, முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, தென்னாப்பிரிக்க தொடர் முடிவடைந்த மறுநாளே கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கண்ட சிறந்த கேப்டன் என்ற பெயருடன் விளங்கும் கோலி, திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

சரி வராது

கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பைத் தொடருடன் அதன் கேப்டன் பதவியில் இருந்து விலகவே, ஒரு நாள் மற்றும் டி 20 என இரண்டிற்கும் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மாவை பிசிசிஐ நியமித்திருந்தது. குறைந்த ஓவர் போட்டிகளில், இரண்டு கேப்டன்கள் என்பது இந்திய அணிக்கு ஒத்து வராது என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோலியின் எதிர் கருத்து

இது பற்றி மேலும் பேசியிருந்த பிசிசிஐ தலைவர் கங்குலி, கோலியை தொடர்ந்து டி 20 கேப்டன் பதவியில் செயல்பட வலியுறுத்தினோம் என்றும், ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து, தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பு பேசிய கோலி, என்னை தொடர்ந்து டி 20 கேப்டனாக செயல்பட யாரும் கேட்டுக் கொள்ளவில்லை என்றும், தன்னை ஒரு நாள் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது கூட, கடைசி நேரத்தில் தான் தன்னிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்தது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

விமர்சனம்

இந்திய அணி நிர்வாகத்திற்கும், வீரர்களுக்கும் இடையே தெளிவான உரையாடல் இல்லை என பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்திருந்தனர். இன்றளவும், பிசிசிஐ - கோலி விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்னொரு பக்கம், தன்னுடைய கேப்டன்சி சமயத்தில், இந்திய அணியை சிறந்த இடத்திற்கு கோலி சென்ற போதும், அவர் ஒரு உலக கோப்பையைக் கூட கைப்பற்றவில்லை என்ற விமர்சனமும் எழாமல் இல்லை.

கங்குலி ஜெயிச்சது இல்ல

இந்நிலையில், கோலிக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'எத்தனை கிரிக்கெட் அணிகள், இத்தனை ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக சிறந்த கிரிக்கெட் ஆடியுள்ளது என்பதை முதலில் கூறுங்கள்.

எத்தனையோ பெரிய வீரர்கள் கூட உலக கோப்பையை வென்றதில்லை. கங்குலி கேப்டனாக உலக கோப்பையை வென்றதே இல்லை. அதே போல, ராகுல் டிராவிட், அணில் கும்ப்ளே, லக்ஷ்மண் உள்ளிட்டோரும் உலக கோப்பையை வென்றது கிடையாது. உலக கோப்பையை வெல்லவில்லை என்றால், அவர்கள் மோசமான வீரர்கள் என அர்த்தமில்லை.

உலக கோப்பை அடிப்படை அல்ல

இந்திய அணியைப் பொறுத்தவரையில், இரண்டு கேப்டன்கள் தான் உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளனர். சச்சின் டெண்டுல்கருக்கு கூட, 6 உலக கோப்பை தொடரில் ஆடிய பிறகு தான், கடைசியில் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைத்தது.


இதனால், உலக கோப்பையை வைத்து, நீங்கள் எதையும் தீர்மானிக்கக் கூடாது. ஒரு வீரர் எப்படி ஆடுகிறார், எந்த விதத்தில் அவர் விளையாட்டை அணுகுகிறார், எத்தனை ஆண்டு காலம் கிரிக்கெட்டில் அவர் நிலைத்து நிற்கிறார் என்பதை வைத்து தான், ஒரு வீரரை நீங்கள் மதிப்பிட வேண்டும்' என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

நான் பேசுனா தப்பு ஆயிடும்

மேலும், கங்குலி - கோலி விவகாரம் பற்றி பேசிய ரவி சாஸ்திரி, 'இரு தரப்பினரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது. நானும் அவர்களிடம் பேசவில்லை. அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தால், என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை நான் தெரிவிப்பேன். ஆனால், அதைப் பற்றி அரைகுறை தெளிவு இருக்கும் போது, நான் கருத்து சொல்வது சரிவராது' என தெரிவித்தார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த சமயத்தில், கோலியுடன் இணைந்து பல சிறப்பான தொடர்களை வென்று, இந்திய கிரிக்கெட் அணி சாதனை புரிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

SOURAVGANGULY, VIRATKOHLI, BCCI, RAVI SHASTRI, CAPTAIN, விராட் கோலி, சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்