வெளிநாட்டு வீரரிடம் ‘சைலண்டா’ பேச்சுவார்த்தை நடத்திய ராஜஸ்தான்.. ‘கசிந்த தகவல்’.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் புதிதாக வீரர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் இந்தியாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 16 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 8 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் இடத்திலும், 6 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் 3-வது இடத்திலும் உள்ளன. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் 2 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்றது.

இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு புதிதாக வீரர் ஒருவர் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்சர் (Jofra Archer) காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இவரை தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் விளையாடும், மற்றொரு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), கட்டை விரலில் காயம் ஏற்பட்டு தொடரின் பாதியிலேயே வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் விளையாடும் மற்றொரு இங்கிலாந்து வீரரான லியாம் லிவிங்ஸ்டன் (Liam Livingstone) திடீரென நாடு திரும்பினார். கடந்த ஒரு ஆண்டாக பயோ பபுலில் இருப்பதால், தனது குடும்பத்துடன் சிறிதுகாலம் நேரம் செலவிட வேண்டும் என அந்த அணி நிர்வாகத்திடம் கூறிவிட்டு ஐபிஎல் தொடரில் இருந்து லியாம் லிவிங்ஸ்டன் விலகினார்.

இப்படி முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து விலகியதால், ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இது அந்த அணி விளையாடிய அடுத்தடுத்த போட்டிகளில் வெளிப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ராஸி வான் டெர் டுசெனிடம் (Rassie van der Dussen) ராஜஸ்தான் அணி பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் இந்தியா வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர் சமீபத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 183 ரன்கள் (1 சதம் உட்பட) அடித்துள்ளார். இதுவரை 20 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ராஸி வான் டெர் டுசென், மொத்தமாக 628 ரன்கள் (ஸ்டைக்ரேட் 138) எடுத்துள்ளார். அதனால்தான் ராஜஸ்தான் அணி இவரை தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஸி வான் டெர் டுசெனை முதலில் எந்த அணியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்