‘அடி தூள்’!.. பொறுப்பை கையில் எடுக்கிறாரா ராகுல் டிராவிட்?.. கசிந்த தகவல்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதுகின்றன. இந்த தொடரில் விளையாட உள்ள வீரர்களில் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. தற்போது மும்பை தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர்கள், வரும் ஜூன் 2-ம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளனர். மேலும் இந்த அணியே அடுத்த நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிவடைந்ததும், அடுத்ததாக இங்கிலாந்து டெஸ்ட் நடைபெற கிட்டத்தட்ட ஒரு மாதம் இடைவெளி உள்ளது. அதனால் இதற்கிடையில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரித்திருந்தார். மேலும் இந்த தொடரில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் தவிர மற்ற அனைவரும் இளம்வீரர்கள் தான் பங்கேற்க உள்ளதாக கங்குலி தெரிவித்தார்.

இதனால் இலங்கை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ANI வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களான ரவி சாஸ்திரி, பாரத் அருண், விக்ரம் ரத்தோர் ஆகியோர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியளிப்பார். அவர் ஏற்கனவே 19 வயதுகுட்பட்ட இந்திய அணிக்கு பயிற்சி அளித்துள்ளார். அதனால் இந்த சுற்றுப்பயணத்தில் விளையாட உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு அவருடன் இணக்கமான புரிதல் உள்ளது. அது அணிக்கு சாதகமாக இருக்கும்’ என பிசிசிஐ அதிகாரி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் பல வீரர்கள் ராகுல் டிராவிட்டின் பட்டறையில் இருந்து வந்தவர்கள் தான். அதில் குறிப்பாக ரிஷப் பந்த், ப்ரீத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், மயங்க் அகர்வால், இஷான் கிஷன், நவ்தீப் சைனி, ரியான் பராக், கம்லேஷ் நாகர்கோட்டி உள்ளிட்ட பல வீரர்கள் இவர் பட்டறையில் இருந்து வந்துள்ளனர்.

அதேபோல் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது, 2016-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரையும், 2018-ல் உலகக்கோப்பையையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. தற்போது உள்ள இந்திய அணியின் அடிப்படை வலுவாக இருப்பதற்கு ராகுல் டிராவிட்தான் காரணம் என ஆஸ்திரேலியாவின் கிரேட் சாப்பல் புகழ்ந்து பேசியுள்ளார். இந்த நிலையில், இலங்கை செல்ல உள்ள இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்