"ஒரு தடவ மட்டும் 'பெர்ஃபார்ம்' பண்ணா போதுமா??.. அவ்ளோ 'ஈஸி'யா அவரால 'கம்பேக்' குடுத்துட முடியாது.." 'இளம்' வீரர் முன் உள்ள 'சோதனை'!!.. "என்ன பண்ணப் போறாரோ??.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் மோதவுள்ளன.

முன்னதாக, கிட்டத்தட்ட பாதி லீக் போட்டிகள் வரை ஐபிஎல் தொடர் முடிவடைந்திருந்த நிலையில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இளம் வீரர்கள் அதிகம் பேர் பட்டையைக் கிளப்பியிருந்தனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடி வரும் இளம் வீரர் பிரித்வி ஷா (Prithvi Shaw), இந்த சீசனில் 8 போட்டிகள் ஆடி, 308 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் களமிறங்கிய பிரித்வி ஷா, இரண்டு இன்னிங்ஸ்களில் 0 மற்றும் 4 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன் பிறகு, அவருக்கு அந்த தொடரில் வாய்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை. தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும், பிரித்வி ஷா தேர்வாகவில்லை. தற்போது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பிரித்வி ஷா பெயர் சேர்க்கப்படவில்லை.

ஆனால், இதனிடையே நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் பல சாதனைகளை படைத்திருந்தார் பிரித்வி ஷா. அதன் பிறகு, ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய போதும், சர்வதேச அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், பல கிரிக்கெட் பிரபலங்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான பிரவின் அம்ரே (Pravin Amre), இந்திய அணியில் பிரித்வி ஷா இடம் குறித்து பேசுகையில், 'பிரித்வி ஷா மிகவும் திறமையான வீரர். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடும் வல்லமை உடையவர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி சிறப்பாக ஆடியதால், அணிக்குள் சில இடங்களுக்காக போட்டிகள் அதிகம் நிலவியுள்ளது. பிரித்வி ஷாவிற்கு இது நிச்சயம் எளிதாக இருக்காது.

ஒருமுறை மட்டும் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்து விடாது. தொடர்ந்து, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டும். அத்துடன், பிரித்வி ஷா தனது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ரன்களைக் குவிக்க வேண்டும் என்பது தான் பிரித்வி ஷாவின் இலக்காக இருக்க வேண்டும். அப்போது தான் அவருக்கான இடம், இந்திய அணியில் மீண்டும் கிடைக்கும்' என பிரவீன் ஆம்ரே தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்