VIDEO: ‘அம்பயர் அவுட்டே கொடுக்கல.. எங்க போறீங்க..?’ வேகமாக நடையைக் கட்டிய ‘இந்திய’ வீராங்கனை.. கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீராங்கனை செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இதுவரை 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) சதம் (127 ரன்கள்) அசத்தியுள்ளார். இதனிடையே மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டுள்ளது.

இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் வீராங்கனை பூனம் ரவுத் (Punam Raut) செய்த செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அதில், இப்போட்டியின் 81-வது ஓவரை ஆஸ்திரேலியாவின் சோஃபி மோலினக்ஸ் (Sophie Molineux) வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட பூனம் ரவுத்தின் பேட்டின் நுனியில் பட்டு பந்து சென்றது. இதனை விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி (Alyssa Healy) கேட்ச் பிடித்துவிட்டார்.

ஆனால், அம்பயர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இருந்தாலும் தனது பேட்டில் பந்து பட்டு சென்றது அறிந்த பூனம் ரவுத், வேகமாக பெவிலியன் திரும்பினார். இதைப் பார்த்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளும் ஆச்சரியமடைந்தனர்.

பூனம் ரவத்தின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு (Spirit of Cricket) இதுதான் உதாரணம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பூனம் ரவுத்தின் செயலை பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்