‘ஆமா அவங்களுக்கு அது சாதகம்தான், ஆனா அத நெனச்சு எங்களுக்கு கவலையில்ல’!.. WTC Final குறித்து புஜாரா ஓபன் டாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 3-ம் தேதி தனி விமானம் மூலம் இந்திய அணி இங்கிலாந்து சென்றது. அங்கு சில நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அதில் இந்திய வீரர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள புஜாரா, இப்போட்டி குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக நியூஸிலாந்து அணி இங்கிலாந்து மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இது நிச்சயம் அவர்களுக்கு சாதகமான ஒன்றாக இருக்கும்.

ஆனால் இறுதிப்போட்டி என்று வரும்போது நாங்கள் எங்களுடைய மிகச்சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்துவோம். நன்றாக விளையாடி கோப்பையை வெல்வதற்குரிய திறமை எங்கள் அணியிடம் உள்ளது. அதனால் மற்ற விஷயங்களை பற்றி கவலையில்லை. தற்போது எங்களுக்குள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி எங்களை தயார்படுத்தி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இங்கிலாந்து மண்ணில் ஒரே நாளில் வெவ்வேறு சீதோஷ்ண நிலையில் விளையாடுவது ஒரு பேட்ஸ்மேனாக மிகவும் சவாலாக இருக்கும். அதாவது திடீரென மழை குறுக்கிட்டு போட்டி தடைபட்டு, பின்னர் மீண்டும் பேட்டிங் செய்யும் போது நீங்கள் சூழலை சரியாக புரிந்து கொண்டு விளையாட வேண்டியது அவசியம். மனரீதியாக வலுவாக இருக்க வேண்டும். அப்போது தான் சாதிக்க முடியும்’ என புஜாரா தெரிவித்துள்ளார்.

முன்னதாக நியூஸிலாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூஸிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் நியூஸிலாந்து அணிக்கு கிடைத்துள்ளது. இது அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்