இந்த வருசம் எப்படியும் ‘கப்’ ஜெயிச்சிறலாம்னு இருந்தோமே.. இப்படி ‘மண்ணை’ அள்ளி போட்டாங்களே.. இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்ததை அடுத்து RCB fans என இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்தது. கொரோனா தொற்று காரணமாக ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும் கிரிக்கெட் வீரர்களும் பயோ பபுளில் இருந்து விளையாடி வந்தனர். கிட்டத்தட்ட பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில், சில கிரிக்கெட் வீரர்களுக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனால் தொடர்ந்து போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன்காரணமாக இரண்டு போட்டிகள் நிறுத்தப்பட்டது. முதலில் கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சாஹா, டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா என அடுத்தடுத்து வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்ப தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்தது. இதனை அடுத்து உடனே சமூக வலைதளங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டிரெண்டாக ஆரம்பித்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. ஆனால் இதுவரை வரை நடந்த ஐபிஎல் தொடர்களில் ஒரு முறை கூட பெங்களூரு அணி கோப்பையை வென்றதில்லை. 3 முறை இறுதிபோட்டி வரை சென்று தோல்வியை தழுவியுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூரு அணி ஐபிஎல் இறுதிப்போட்டி வரை சென்று டெக்கான் சார்ஜஸிடம் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து 2011-ம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி, அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்து ப்ளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. அதனால் இந்த ஆண்டு எப்படியும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் பெங்களூரு அணி விளையாடியது. அதன்படி இந்த ஆண்டு விளையாடிய முதல் 4 போட்டிகளில் பெங்களூரு அணி தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தியது.

இதனால் இந்த முறை பெங்களூரு அணி கோப்பையை வென்றுவிடும் என RCB ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் திடீரென தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை பிசிசிஐ ஒத்திவைத்தது. இதனை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அவர்களது சொந்த நாட்டு திரும்ப உள்ளனர்.

மேலும் வரும் மாதங்களில் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் வர உள்ளதால், மீண்டும் ஐபிஎல் தொடர் நடைபெறுவது சந்தேகம்தான் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனால் இந்த ஆண்டும் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை தவறவிட்டதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்