VIDEO: ‘கேட்ச் பிடிக்கும்போது மிஸ்ஸான டைமிங்’.. தோள்ப்பட்டையில் விழுந்த பலத்த அடி.. வலியால் துடித்த ‘இந்திய’ இளம் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியின்போது இந்திய அணியின் இளம் வீரர் ஒருவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 21 ரன்களும் மற்றும் தேவ்தத் படிக்கல் 29 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

இதனால் 133 அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்தது. ஆனால் ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் ரன்கள் எடுக்க முடியாமல் இலங்கை அணி திணறி வந்தது. அந்த சமயத்தில் களமிறங்கிய தனஞ்சய டி சில்வா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் இலங்கை அணி மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீண்டது. கடைசி 6 பந்துக்கு 8 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி இருந்தது. ஆனால் 4 பந்திலேயே 8 ரன்கள் எடுத்து இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

இந்த நிலையில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி தோள்ப்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இப்போட்டியின் 19-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட இலங்கை வீரர் கருணாரத்னே, பந்தை பவுண்டரிக்கு விளாசினார்.

அப்போது பவுண்டரில் லைனில் பீல்டிங் செய்துகொண்டிருந்த நவ்தீப் சைனி, பறந்து பந்தை தடுக்க முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில், அவரது தோள்ப்பட்டையில் பலமாக அடி விழுந்தது. இதனால் வலியில் துடித்த அவருக்கு உடனடியாக மருத்துவர்கள் முதலுதவி செய்தனார். இந்த சூழலில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று (29.07.2021) நடைபெறுகிறது. ஆனால் நவதீப் சைனி காயத்தால் அவதிப்படுவதால், இன்றைய போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

ஏற்கனவே க்ருணால் பாண்ட்யாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால், அவருடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் யாரும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல் போன்ற அறிமுக வீரர்களுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த சூழலில் நவ்தீப் சைனிக்கு காயம் ஏற்பட்டது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்