"ரொம்ப வேதனையா இருக்குங்க.." 'ஐபிஎல்' தொடரில் இருந்து விலகும் 'நடராஜன்'... வருத்தத்துடன் பகிர்ந்த 'விஷயம்'!.. வைரலாகும் 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஐபிஎல் சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காக ஆடிய தமிழக வீரர் நடராஜன் (Natarajan), ஐபிஎல் தொடரில் ஜொலித்ததன் காரணமாக, இந்திய அணியின் வலைப்பந்து வீச்சாளராக ஆட வாய்ப்பு கிடைத்திருந்தது.

அதன் பிறகு, சில இந்திய வீரர்கள் காயமடைந்ததால், நடராஜனுக்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி, அற்புதமாக பந்து வீசிய நடராஜன், பல முன்னாள் வீரர்களின் பாராட்டையும் பெற்று அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் தேர்வான நடராஜன், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் களமிறங்கினார்.


இதன் முதல் இரண்டு போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய நடராஜன், காயத்தால் அவதிப்பட்டதால், தொடர்ந்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் களமிறங்கவில்லை. இந்நிலையில், அவர் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி, ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ஹைதராபாத் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது பற்றி, நடராஜன் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'இந்த வருடம், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காமல் விலகுவதால், மிகுந்த வருத்தத்தில் உள்ளேன். கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதால் தான், இந்திய அணியில் ஆடும் வாய்ப்பே எனக்கு கிடைத்தது.

இதனால், இந்த முறை அதிக எதிர்பார்ப்புடன் ஐபிஎல் தொடரில் களமிறங்கினேன். ஆனால், எதிர்பாராத விதமாக, முழங்கால் பகுதியில் காயம் அடைந்ததால், இந்த ஐபிஎல் தொடரை மிஸ் செய்கிறேன். சன்ரைசர்ஸ் குடும்பத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு மேல் என்ன பேச வேண்டும் என்ற தெரியவில்லை. கஷ்டமாக இருக்கிறது' என வேதனையுடன் குறிப்பிட்டார்.

 

இனி வரும் போட்டிகளில், ஹைதராபாத் அணி வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களையும் நடராஜன் குறிப்பிட்டிருந்தார். நடராஜன் அணியில் இருந்து விலகுவதால், அவரது ரசிகர்கள், வேதனையுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்