‘விடாமுயற்சி இருந்தா உங்களுக்கு அது கிடைக்கும்’!.. வெற்றிக் கோப்பையுடன் ‘நடராஜன்’ பதிவிட்ட உணர்ச்சிகரமான பதிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதை அடுத்து தமிழக வீரர் நடராஜன் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 78 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 67 ரன்களும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 64 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 330 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 1 விக்கெட்டும் எடுத்தனர். அதேபோல் இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை இளம்வீரர் சாம் கர்ரன் 95 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இப்போட்டியில் கடைசி ஓவரில் 14 ரன்கள் அடித்தால் வெற்றி நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது. அப்போது தமிழக வீரரான நடராஜனை பந்துவீச கேப்டன் கோலி அழைத்தார். அந்த ஓவரில் தனது நேர்த்தியான யார்க்கர்கள் மூலம் 6 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து இங்கிலாந்தை கட்டுப்படுத்தினார். இதனால் இங்கிலாந்து அணி 7 ரன்களில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது குறித்து நடராஜன் ட்விட்டரில் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘நீங்கள் விடாமுயற்சியுடன் இருந்தால், உங்களுக்கு அது கிடைக்கும். அதில் நீங்கள் உறுதியாக இருந்தால், அதை தக்க வைப்பீர்கள்’ என நடராஜன் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்