VIDEO: உண்மையை சொல்லுங்க..! மறுபடியும் சிஎஸ்கே அணியில் விளையாடுவீங்களா..? சிரிச்சிக்கிட்டே தோனி சொன்ன ‘அல்டிமேட்’ பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஆண்டு விளையாடுவது குறித்த கேள்விக்கு தோனி கூறிய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துபாய் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் (IPL) தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டு பிளசிஸ் 86 ரன்களும், மொயின் அலி 37 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 14-வது சீசன் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி கைப்பற்றியுள்ளது.

இந்த ஐபிஎல் தொடருடன் அனைத்து அணியிலும் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. மேலும் இரண்டு புதிய அணிகள் இணைய உள்ளன. இதனால் தோனி மீண்டும் சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து போட்டி முடிந்த பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி (Dhoni), ‘அடுத்த ஆண்டு இரண்டு புதிய அணிகள் வரவுள்ளன. எத்தனை வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை. பிசிசிஐயின் முடிவைப் பொறுத்துதான் என் ஐபிஎல் எதிர்காலம் அமையும்’ என தோனி கூறினார்.

அப்போது குறுக்கிட்ட வர்ணனையாளர், ‘உண்மையை சொல்லுங்கள், இது பிசிசிஐயை பொறுத்தது கிடையாது. சிஎஸ்கே அணியும், நீங்களும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு’ என சிரித்துக்கொண்டே கூறினார்.

இதற்கு பதிலளித்த தோனி, ‘சிஎஸ்கே அணியின் எதிர்காலம் குறித்து தான் இப்போது யோசிக்க வேண்டும், தோனி என்ற நபர் குறித்து அல்ல. தற்போது அமைய உள்ள அணி அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறப்பாக இருக்க வேண்டும். நாங்கள் 2008-ல் அமைத்த அணி 2021 வரை அற்புதமாக இருந்து வருகிறது. அதேபோல் தான் மீண்டும் இருக்க வேண்டும். அதனால் என்னை விட, 3 முக்கியமான வீரர்களை தக்கவைத்து கொள்வதே சிறந்தது’ என தோனி கூறினார்.

அப்போது, ‘சிஎஸ்கே அணியில் தோனி விட்டுச்சென்ற மரபு குறித்து பெருமைப்படுகிறீர்களா?’ என வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த தோனி, ‘நான் இன்னும் சிஎஸ்கே அணியை விட்டுச் செல்லவில்லை’ என கூறினார். இதன்மூலம் சிஎஸ்கே அணியில் மீண்டும் விளையாடுவதை தோனி மறைமுகமாக உறுதி செய்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்