‘அறிமுகப் போட்டியிலேயே அதகளம்’... ‘இன்னொரு ஃபாஸ்ட் பவுலர் இந்திய அணிக்கு கிடைச்சாச்சு’... ‘இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய’... ‘ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான இளம் வீரர் முகமது சிராஜை, அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி நேற்று மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கில் களமிறங்கியது. முதல் டெஸ்ட போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், நேற்று களமிறங்கியதும், முதல் நாள் ஆட்டநேரம் முடிவதற்கு முன்பாக தங்களது முதல் இன்னிங்சை முடித்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதற்கு இந்திய அணியின் தரமான பந்துவீச்சு காரணமாக இருந்தது. இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நேற்றைய டெஸ்ட போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய முகமது சிராஜ் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் பந்து வீச்சு குறித்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சிராஜின் ஆக்ரோஷம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவரின் பந்துவீச்சில் உள்ள லைன் அண்ட் லென்த் எல்லாம் அற்புதமாக உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு மற்றுமொரு சிறந்த வேகப்பந்துவீச்சாளர் கிடைத்து விட்டார் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் அதிக முறை அவரது பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. அப்பீல் எழுப்பபட்டது. அதுமட்டுமின்றி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சரியான அளவில் சிறப்பான வேகத்தில் அவர் தொடர்ச்சியாக பந்து வீசுகிறார். ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் வீசும் அவர் புதிய பந்தில் ஷார்ட் பிட்ச் பந்து வீச அதிகம் விரும்பி உபயோகிக்கிறார்.

ஏற்கனவே இந்திய அணியில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி வரும் நிலையில் அடுத்த நம்பிக்கையான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் நிச்சயம் வருவார். மேலும் உமேஷ் யாதவை விட சிராஜ் நல்ல பவுலர் என்பது என்னுடைய கருத்து’ என்று பாண்டிங் பாராட்டியுள்ளார். ஆட்டோ ஓட்டுநரான தந்தையின் இறப்புக்கு கூட இந்தியாவிற்கு வராமல், அவரது கனவை நிறைவேற்றுவதற்காக, சிராஜ் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சாதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்