VIDEO: ‘ராஜ மரியாதை’-னு சொல்லுவாங்கல அது இதுதான்.. ஹீரோ மாதிரி ‘மாஸ்’ என்ட்ரி.. பார்த்தாலே விசில் அடிக்க வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்தது. அதேபோல் இங்கிலாந்து அணியும் தங்களது முதல் இன்னிங்ஸில் 391 ரன்களை எடுத்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனை அடுத்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. இப்போட்டியில் ஆரம்பமே இந்திய அணிக்கு சோதனையாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் 5 ரன்னிலும், ரோஹித் ஷர்மா 21 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் 20 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த புஜாரா (45 ரன்கள்) மற்றும் ரஹானே (61 ரன்கள்) கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. அடுத்து வந்த ஜடேஜா 3 ரன்னிலும், ரிஷப் பந்த் 22 ரன்களிலும், இஷாந்த் ஷர்மா 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டம் மெதுவாக இங்கிலாந்து பக்கம் திரும்பியது. 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தது.

அப்போது வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் முகமது ஷமி 70 பந்துகளில் 56 ரன்கள் அடித்து மிரட்டினார். அதேபோல் பும்ராவும் 34 ரன்கள் எடுத்து அசத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கூட்டணியை கடைசி வரை இங்கிலாந்து அணியால் பிரிக்க முடியவில்லை.

இதனை அடுத்து 298 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து வெற்றி பெற 271 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணி இழந்தது. இதனால் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் கபில்தேவ், தோனியை தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்ற மூன்றாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது முகமது ஷமி மற்றும் பும்ராவின் ஆட்டம்தான். இதுதான் போட்டியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனால் இருவரும் பேட்டிங் செய்து முடித்த பின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு திரும்பியதும், மொத்த இந்திய அணியும் எழுந்து நின்று கைத்தட்டி மரியாதை செய்தது. பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்