"இப்டி எல்லாம் எங்கயும் நடந்ததில்ல... என்ன தான் நெனச்சு இருக்கீங்க??..." ரோஹித் விவகாரத்தால் கொந்தளித்த 'வாகன்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் அதற்கு அடுத்தபடியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடர் விளையாடவுள்ளது.

இதில் காயம் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா அணியில் இடம்பெறவில்லை என பிசிசிஐ குறிப்பிட்டிருந்தது. அவருக்கு 3 வாரங்களுக்கு மேல் ஓய்வு தேவை என்றும் பிசிசிஐ குறிப்பிட்டிருந்த நிலையில், மும்பை அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தது மட்டுமில்லாமல் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கினார்.

இதனால் அவர் உண்மையில் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வேண்டுமென்றே ரோஹித் ஷர்மாவை அணியில் இருந்து புறக்கணித்துள்ளார்களா என்றெல்லாம் கேள்விகள் எழுந்து பரபரப்பை உண்டு பண்ணியது. அது மட்டுமில்லாமல், ரோஹித் அணியில் இடம்பெறாமல் போனதற்கு விராட் கோலியும் காரணம் என பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் களமிறங்க முடிந்த ரோஹித்திற்கு இந்திய அணியில் நிச்சயம் இடம்பெற முடியும். இனி அவர் அணியில் இடம்பெறுவது குறித்து முடிவுகள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ரோஹித் சர்மா அணியில் இடம்பெறாதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

'ரோஹித் ஷர்மா அணியில் இடம்பெறாமல் போனதற்கு காயம் தான் காரணம் என தெரியவில்லை. அவர் போட்டியில் ஆட உடற்தகுதி (Ftiness) இல்லாமல் இருக்கலாம். அதனால் தான் அவர் அணியில் தேர்வாகாமல் இருந்திருக்கலாம். யாராக இருந்தாலும் உடல் தகுதி இல்லாமல் இருந்தால் அணியில் இடம்பெற முடியாது.

ரோஹித்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றால் அவருக்கு காயம் என்ன என்பதை முதலில் கூறுங்கள். அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. அதனால் தான் அவர் போட்டிகளில் ஆடவில்லை. அது பிரச்சனையே இல்லை. ஆனால், அவர் ஆடினால் அவருக்கு காயம் ஏற்பட்டு விடும் என்பதற்காக அவரை அணியில் இடம்பெறச் செய்யவில்லை என்பதெல்லாம் என் வாழ்நாளில் நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.

அடுத்த வாரத்தில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. ஐபிஎல் போட்டியில் ரோஹித் சிறப்பாக ஆடினால் நிச்சயம் ஆஸ்திரேலியா சென்றே ஆக வேண்டும். ஐபிஎல் போட்டியில் ஆடி விட்டு ஆஸ்திரேலியா செல்ல முடியாது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், இந்த விஷயம் எதுவும் வெளிப்படையாக நடக்கவில்லை. பிசிசிஐ இந்த விஷயத்தில் எதையோ மறைப்பது போல உள்ளது. அவருக்கு காயம் என்றால் காயம் என்று சொல்லுங்கள். அதில் பிரச்சனை ஒன்றுமில்லை. வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் தான்' என ரோஹித் ஷர்மா விவகாரத்தில் தனது கருத்தை வாகன முன் வைத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்