‘உலகக்கோப்பையை மனசுல வச்சு பண்ணுங்க’.. அவர் பெஞ்ச்ல உட்காரட்டும்.. ‘இந்த ரெண்டு பேரைதான் ஓப்பனிங் இறக்கி விடுணும்’.. முன்னாள் வீரர் சொன்ன புது கணக்கு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பையை மனதில் வைத்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தொடக்க வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என விவிஎஸ் லட்சுமண் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 12-ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ஒவ்வொரு இடத்துக்கும் வீரர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசைக்கு ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், இஷன் கிஷான் ஆகியோர் மத்தியில் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது இந்திய அணியின் தொடக்க வீரர்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். அதில், ‘தற்போது ஷிகர் தவான் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி நல்ல ஃபார்மில் உள்ளார் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவரை டி20 உலகக்கோப்பைக்கான ரிசர்வ் தொடக்க வீரராகவே வைத்திருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஷிகர் தவானுடன், கே.எல்.ராகுல் களமிறங்கினார். இப்போது ரோஹித் ஷர்மா வந்துவிட்ட நிலையில் மீண்டும் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா கூட்டணியை களமிறக்குவது சரியான தேர்வாக இருக்காது. இதில் யாரை தேர்வு செய்வது என்பது கடினமான கேள்விதான் என்றாலும், வலிமையான தொடக்கத்துக்கு கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா ஜோடிதான் சரியாக இருக்கும். ஷிகர் தவானை ரிசர்வ் தொடக்க ஆட்டக்காரராகவே வைத்திருக்கலாம்.

ரோஹித் ஷர்மாவை பொறுத்தவரை டி20, ஒருநாள் தொடரில் சிறந்த தொடக்க வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதிரடியான தொடக்கத்துக்கு ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுலுடன் சேர்ந்து களமிறங்குவதுதான் சரியாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக கே.எல்.ராகுலின் ஆட்டம் பிரமாதமாக இருந்து வருகிறது.

ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடினார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சதம் அடித்தார். விஜய் ஹசாரே போட்டியில் விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால், உலகக்கோப்பை போட்டிக்கு ரிசர்வ் ஓப்பனரை மனதில் வைத்து ஷிகர் தவானை களமிறக்குவதைத் தவிர்க்க வேண்டும். இதில் கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா யாரேனும் ஒருவர் ஃபார்மை இழக்கும் பட்சத்தில் அல்லது காயமடைந்தால் ஷிகர் தவானைப் பயன்படுத்த வேண்டும்’ என விவிஎஸ் லட்சுமண் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பந்துவீச்சு குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘புவனேஷ்வர் குமார் மீண்டும் வந்திருப்பது அணியின் பந்துவீச்சை பலப்படுத்தும், இன்னும் வலிமையாக்கும். ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு பலத்தையும், துணிச்சலையும் அனைவரும் பார்த்திருப்போம்.

புவனேஷ்வர் குமார் உடல்நலம் தேறி வந்திருப்பது மகிழ்ச்சிதான். முக்கியமான பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமாருக்கு டி20 தொடர் முழுவதும் வாய்ப்பு வழங்காமல் 2 அல்லது 3 போட்டிகளில் மட்டுமே களமிறக்க வேண்டும். அடுத்து உலகக்கோப்பை டி20 தொடர் நடக்க உள்ளது. அதனால் அதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

இந்திய அணியில் பும்ராவை தவிர்த்து புதிய பந்தில் டெத் பவுலிங் வீசவும், துல்லியமாக ஸ்விங் செய்யவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் யார் எனக் கேட்டால் புவனேஷ்வர் குமார்தான். அதனால், அவருக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் 3 போட்டிகளில் மட்டுமே களமிறக்க வேண்டும். அக்டோபர், நவம்பரில் நடக்கும் உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவை அணி நிர்வாகம் எடுக்க வேண்டும்’ என விவிஎஸ் லட்சுமண் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்