தோனியை ‘புகழ்ந்து’ பேசிய அந்த வார்த்தை.. அப்போ மறைமுகமாக கோலியை விமர்சிக்கிறாரா ராகுல்..? புதிய சர்ச்சையை கிளப்பும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனியை புகழ்ந்து பேசிய கே.எல்.ராகுலின் கருத்து தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் தலைமையிலான இந்திய அணி பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது. அதில், குறிப்பாக டி20 உலகக்கோப்பை, ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. ஐசிசி நடத்தும் இந்த மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் கே.எல்.ராகுல் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தோனி குறித்து புகழ்ந்து பேசியிருந்தார். அதில், ‘இந்தியாவுக்காக தோனி நிறைய பெருமைகளை தேடி தந்துள்ளார். நாட்டுக்காக முக்கியமான பல கோப்பைகளை கேப்டனாக இருந்து பெற்றுக் கொடுத்துள்ளார். இவற்றை எல்லாம் விட நான் பெருமையாக நினைப்பது, அவர் சக வீரர்களை மரியாதையுடன் நடத்துவதுதான். இந்த பண்புக்காகவே, அவர் சொன்னால் துப்பாக்கி குண்டுகளை எந்தவித யோசனையும் இன்றி தாங்கிக்கொள்வேன். இதை அவருடன் விளையாடிய எந்த வீரரை கேட்டாலும் இப்படிதான் சொல்வார்கள்’ என கே.எல்.ராகுல் கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘கேப்டன் என்றால் எங்கள் நினைவுக்கு முதலில் வரும் பெயர் தோனி மட்டும்தான். ஏனென்றால் அவர் ஒரு சகாப்தம். இப்போது இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் பல வீரர்கள் தோனியின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளனர். நான் அவரிடமிருந்து ஒரு முக்கியமான விஷயத்தை கற்றுக்கொண்டுள்ளேன். அது, வாழ்வில் ஏற்றமோ, தாழ்வோ எப்போதும் ஒரே மன நிலையில் இருப்பது’ என தோனியை புகழ்ந்து கே.எல்.ராகுல் பேசியிருந்தார்.

இந்த நிலையில், இதன்மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை மறைமுகமாக கே.எல்.ராகுல் விமர்சனம் செய்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை. இதனை அடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்