கே.எல்.ராகுல், ரஷித் கானுக்கு 1 ஆண்டு ஐபிஎல்-ல் விளையாட தடையா..? என்ன நடந்தது..? திடீர் பரபரப்பை கிளப்பும் விவகாரம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் இருந்து ஒரு ஆண்டுக்கு கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தடை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அடுத்த ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ என்ற 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு புதிதாக ஏலம் நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ரோஹித் ஷர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு ஆகிய 4 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் மயங்க் அகர்வால், அர்ஸ்தீப் சிங் ஆகியோரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், கேன் வில்லியம்சன், அப்துல் சமத், உம்ரான் மாலிக் ஆகியோரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கானும் தக்க வைக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓராண்டு தடை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகளும் வாய்மொழியாக இவர்கள் இருவரிடமும் தங்கள் அணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மை என தெரிய வந்தால் கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் ஒரு ஆண்டுக்கு ஐபிஎல் தொடரில் இருந்து தடை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

KLRAHUL, IPL, SRH, RASHIDKHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்