‘ஆரம்பத்துல சிரிச்ச முகத்தோட இருந்தாங்க’!.. அந்த ஒரு ஓவர்ல எல்லாமே ‘தலைகீழா’ மாறிடுச்சு.. நொந்துபோன காவ்யா மாறன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.  அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன்களும், கேப்டன் விராட் கோலி 33 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், சாஹா களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை முகமது சிராஜ் மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். இந்த நிலையில், முகமது சிராஜின் அடுத்த ஓவரில் 1 ரன்னில் சாஹா ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர்-மணீஷ் பாண்டே கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில், கைல் ஜேமிசன் வீசிய 4-வது ஓவரில் மணீஷ் பாண்டே ஒரு சிக்ஸர், வார்னர் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து அசத்தினர். இதனால் பவர் பிளே முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து வார்னர் அதிரடி காட்ட ஆரம்பித்தார். இதனால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஹைதராபாத் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் சேர்த்து ஹைதராபாத் அணி நல்ல நிலையில் இருந்தது.

ஆனால், ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் திடீரென வார்னர் (54 ரன்கள்) ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது 41 பந்துகளுக்கு 54 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. வார்னரின் விக்கெட்டுக்குப் பிறகு அடுத்த 3 ஓவர்களுக்குப் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை. இதனால் கடைசி 4 ஓவர்களில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

இந்த நிலையில் ஷபாஸ் அகமது 17-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஜானி பேர்ஸ்டோவ் (12 ரன்கள்) அவுட்டானார். அடுத்த பந்திலேயே மணீஷ் பாண்டேவும் (38 ரன்கள்) ஆட்டமிழந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் அப்துல் சமத் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டம் பெங்களூரு அணியின் பக்கம் திரும்பியது. இதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.

இதனால் கடைசி 3 ஓவர்களில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டன. ஹர்ஷல் வீசிய 18-வது ஓவரில், 8 ரன்கள் மட்டுமே சென்றது, மேலும் விஜய் சங்கர் 3 ரன்னில் அவுட்டானார். கடைசி 2 ஓவர்களில் ஹைதராபாத் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது 19-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ரஷித் கான் சிக்ஸர் அடித்து அசத்தினார். ஆனால் அந்த ஓவரின் 3-வது பந்தில் ஜேசன் ஹோல்டர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின் அந்த ஓவரில் பவுண்டரிகள் ஏதும் போகாததால், கடைசி ஓவரில் 16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணி இருந்தது. இதனை அடுத்து ஹர்ஷல் பட்லே வீசிய கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே சென்றன. 3-வது பந்து நோபாலாக வீசப்பட ரஷித் கான் அதை பவுண்டரிக்கு விளாசினார்.

இதனால் கடைசி 4 பந்துகளில் 8 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு ஹைதராபாத் அணி வந்தது. ஆனாலும் ஃப்ரீ ஹிட் பந்தை ஹர்ஷல் பட்லே சிறப்பாக வீசியதால் ரன் ஏதும் கிடைக்கவில்லை. அடுத்த பந்தில் இரண்டாவது ரன்னை எடுக்க முயன்று ரஷித் கான் (18 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து கடைசி 2 பந்துகளில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், ஷபாஸ் நதீம் முதல் பந்திலேயே டக் அவுட்டாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிஇஓ காவ்யா மாறன், போட்டியின் ஆரம்பத்தில் உற்சாகமாக காணப்பட்டார். ஆனால் வார்னர் அவுட்டான பின், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சென்றதால் முகம் வாடிப்போனார்.

ஜெயிக்க வேண்டிய போட்டியை கடைசி கட்டத்தில் தவற விட்டதால், காவ்யா மாறன் மிகுந்த சோகமாக காணப்பட்டார். தற்போது இவரது புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்