'அப்டியே தோனி விளையாடறத’... ‘பார்க்கிற மாதிரி இருக்கு’... ‘என்ன ஒரு அதிரடி ஆட்டம்’... ‘இந்திய வீரருக்கு புகழாராம் சூட்டிய ஆஸ்திரேலிய கோச்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில், இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியாவை, ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சிட்னியில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 போட்டியில், ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடினார். இதில் அவர் 22 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு நெருக்கடியான நேரத்தில் வெற்றியைத் தேடித் தந்தார்.

இதுகுறித்து, போட்டிக்கு பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆட்டத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அதில், ‘இப்போட்டி நம்ப முடியாத வகையில் நடைபெற்று முடிந்துள்ளது. ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி குறித்து எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் முன்பு, தோனி பெஸ்ட் பினிஷராக இருந்தார். இப்போது பாண்ட்யா அப்படி ஆடி உள்ளார். பாண்ட்யா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இப்போட்டியில் அதிரடியின் உச்சிக்கே அவர் சென்றுவிட்டார். புளு ஆர்மியில் அனைத்து வீரர்களும் உலகத்தரம் வாய்ந்தவர்களாக இருந்தனர். யாரையும் குறைசொல்வதற்கு ஒன்றுமில்லை. இதுவரை நடைபெற்ற அனைத்துப் போட்டிகளில் இருதரப்பும் வெற்றிக்காக கடைசிவரை போராட வேண்டிய நிலை இருந்தது. இது ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

இந்திய அணியில் கிட்டதட்ட அனைவரும் உலகத்தரம் வாய்ந்தவர்கள். குறிப்பாக விராட் கோலிப் பற்றிப் பேச விரும்புகிறேன். கடந்த சில வருடங்களாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்றையப் போட்டியிலும் கூட 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். ஷாட்கள் அனைத்தும் மிகத் துல்லியமாக இருந்தது. ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை விரைவாக வீழ்த்தியிருந்தால் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

எங்கள் அணி வீரர்கள் குறைசொல்லும் அளவிற்கு விளையாடவில்லை. இருதரப்பும் அதிரடி காட்டியது. கடைசி நேரத்தில்தான் நாங்கள் வெற்றியைப் பறிகொடுத்தோம்’ எனத் தெரிவித்தார். இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்