VIDEO: ‘எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு’!.. இதோட 3-வது தடவை.. இப்போ ‘ஜார்வோ’ என்ன பண்ணார் தெரியுமா..? கொதித்த ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர் ஜார்வோவால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 50 ரன்களும், ஷர்துல் தாகூர் 57 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ராபின்சன் 3 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிரேக் ஓவர்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ, திடீரென பந்துடன் மைதானத்துக்குள் ஓடி வந்து பவுலிங் வீசினார். அப்போது பேட்டுடன் நின்றுகொண்டிருந்து இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ பயந்துபோனார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.

முன்னதாக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியினருடன் பீல்டிங் செய்ய ஜார்வோ மைதானத்துக்குள் நுழைந்தார். இதனை அடுத்து லீட்ஸ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஒரு படி மேலே போய் பேட்டிங் செய்ய பேட்டுடன் மைதானத்துக்குள் வந்துவிட்டார்.

இவ்வளவு பாதுகாப்பையும் மீறி ஜார்வோ மூன்றாவது முறையாக மைதானத்துக்குள் நுழைந்துள்ளார். பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், ஜார்வோவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோல் மீண்டும் நடைபெறாமல் இருக்க அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்