பல வருசம் கழிச்சு ‘சொந்த மண்ணில்’ தோல்வி.. கேப்டன் கோலியின் ரியாக்‌ஷன் என்ன..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெற்றிக்கு 381 ரன்கள் தேவை என்ற நிலையில் 5ம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கியது. களத்தின் தன்மை பேட்டிக்கு சாதமாக இல்லாததால், ஆட்டத்தை டிரா செய்யும் முனைப்புடன் இந்தியா விளையாடியது. இதில் புஜரா 15 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, சுப்மன் கில்லுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்து சுப்மன் கில் நம்பிக்கை தர ஆரம்பித்த நேரத்தில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரஹானேவும் அதே ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்தது.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் அஸ்வின், ஆட்டத்தை டிராவை நோக்கி எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அஸ்வின் 9 ரன்களில் அவுட்டாக, அடுத்து கோலியும் (72 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். 192 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

கடைசியாக 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு 22 ஆண்டுகளாக சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியடையாத இந்தியா அணி, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய கேப்டன் விராட் கோலி, ‘முதல் பாதியில் பந்துவீச்சில் இங்கிலாந்து அணிக்குத் தேவையான அழுத்தத்தை நாங்கள் தரவில்லை என நினைக்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்களும், அஸ்வினும் முதல் இன்னிங்ஸில் நன்றாக பந்துவீசினார்கள். சில ரன்களைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இங்கிலாந்து அணிக்குப் பாராட்டுகள். முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை எடுத்தார்கள். மிகவும் தொழில்முறையுடன் இங்கிலாந்து அணி விளையாடியது.

எங்களுடைய பந்துவீச்சாளர்கள், ஒட்டுமொத்தமாக நன்குப் பங்களித்திருக்க வேண்டும். ஆட்டத்திறனைச் சரியாக வெளிப்படுத்தாததைப் புரிந்துகொள்கிறேன். நாங்கள் எப்போதும் கற்றுக்கொள்ளும் அணியாக உள்ளோம். தோல்வியிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும்’ என அவர் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்