"அவரு சொன்னத எல்லாரும் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க.. ஆனா, இதுதான் விஷயமே.." 'தோனி' சொன்ன ஒரே வார்த்தையால் உருவான 'சர்ச்சை'.. 'ரகசியம்' உடைத்த 'இளம்' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவில் வைத்து நடைபெற்று வந்த நிலையில், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தினால், பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள போட்டிகளை, வேறு நாடுகளில் நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிகவும் சிறப்பாக ஆடியுள்ளது. மொத்தம் 7 போட்டிகள் ஆடியுள்ள சிஎஸ்கே, 5 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சென்னை அணி மிகவும் மோசமாக ஆடியிருந்தது.

முதல் முறையாக, பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல், சென்னை அணி வெளியேறிய நிலையில், கடுமையான விமர்சனங்களையும் அவர்கள் சந்தித்திருந்தனர். மேலும், இந்த தொடரில், சிஎஸ்கேவிலுள்ள இளம் வீரர்களுக்கும் அதிகம் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதுபற்றி, தோனி பேசும் போது, அணியிலுள்ள இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என குறிப்பிட்டு பேசியிருந்ததும், ஒரு பக்கம் கடுமையான பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடைசி 3 லீக் போட்டிகளில், சென்னை அணியின் இளம் வீரர் கெய்க்வாட், அரைச் சதமடித்து, தொடர்ச்சியாக அணியை வெற்றி பெறச் செய்திருந்தார். தோனி குறை கூறியது போல இல்லாமல், ஒரு இளம் வீரரின் உதவியால், 3 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றதால், தோனியின் கருத்திற்கு அதிக விமர்சனங்களையும் சந்தித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை அணியைச் சேர்ந்த மற்றொரு இளம் வீரரான என். ஜெகதீசன் (N Jagadeesan), தோனியின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர், 'தோனி அப்போது சொன்ன கருத்து, பத்திரிக்கைகளால் முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அது இளம் வீரர்களை பற்றிய கருத்து அல்ல. நானும், கெய்க்வாட்டும், சிறப்பாக தான் ஆடினோம். தோனி போன்ற ஒரு வீரர் அணியில் இருக்கும் போது, அணியிலுள்ள இளம் வீரர்கள் மட்டுமில்லாமல், சீனியர் வீரர்களும் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று தான் அவர் விரும்புவார்.

கொரோனா தொற்றின் காரணமாக, அந்த சமயத்தில் சீனியர் வீரர்கள், அதிகம் பயிற்சிகள் ஒன்றும் மேற்கொள்ள முடியவில்லை. அதன் மூலம், சற்று தடுமாறிய வீரார்களை மேம்படுத்துவதை குறிப்பிட்டு தான் தோனி அப்படி சொன்னார். அவரது கருத்திற்கு பிறகு, அணியிலுள்ள அனைவரும் சிறப்பாக ஆடினோம். ஒரு அணியாகவும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தோம்' என ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

தோனி அப்படி சொன்ன பிறகு, 4 போட்டிகள் ஆடியிருந்த சென்னை அணி, அதில் மூன்றில் வெற்றி பெற்று அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்