தோனிக்கு அப்புறம் சிஎஸ்கேவுக்கு ‘கேப்டன்’ யார்..? ‘வேற யாரு நான்தான்’.. ட்வீட் போட்டு உடனே ‘டெலிட்’ செய்த வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டன் யார் என ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு சிஎஸ்கே வீரர் ஒருவர் பதிலளித்தது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாம் கட்ட ஐபிஎல் (IPL 2021) நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 19-ம் தொடங்க உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் (MI) மோதுகின்றன. இதற்காக துபாய் சென்றுள்ள இரு அணி வீரர்களும், அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2 வருடங்களாக ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஐபிஎல் தொடரை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தோனிக்கு (Dhoni) பின்பு சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக யார் தேர்வு செய்யப்படுவார்கள்? என ரசிகர்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு ஜடேஜா (Jadeja), நான் தான் அடுத்த கேப்டன் என்பதுபோல தனது ஜெர்சி நம்பரான 8-ஐ பதிவிட்டார். விளையாட்டாக பதிலளித்து, பின்னர் உடனே அந்த பதிவை டெலிட் செய்துவிட்டார். இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வு பெறப்போவதாக செய்திகள் பரவின. அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது, இதுகுறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘நிச்சயமாக இல்லை’ என பதிலளித்து சர்ச்சைக்கு தோனி முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்